ஒரே நாளில் ரூ.1கோடி!.. ரிக்சாகாரர் உழைப்புக்கு செம அங்கீகாரம். நெகிழ வைக்கும் சம்பவம்!
புவனேஷ்வர்; ஒடிசாவில் பலன் எதுவும் எதிர்பாராமல் காலம் முழுவதும் உழைத்த ரிக்ஷாகாரருக்கு ஜாக்பாட் பரிசாக ரூபாய் 1 கோடி மதிப்பு சொத்து கிடைத்துள்ளது.
ஒடிசா மாநிலம் சுதாஹத் பகுதியை சேர்ந்த மூதாட்டி மினாட்டி என்பவருக்கு மூன்று மாடிகள் கொண்ட வீடு, தங்க நகைகள் என ஏராளமான சொத்து உள்ளது. இவரது குடும்பத்திற்கு கடந்த 25 ஆண்டு காலமாக புத்த சமால் என்பவர் ரிக்ஷா ஓட்டிவந்துள்ளார்.
மேலும் மினாட்டியின் குடும்ப பணிகளையும் கவனித்து வந்துள்ளார். இதற்கிடையே சில ஆண்டுகளுக்கு முன்னர் மினாட்டியின் கணவர் சிறுநீரகம் செயலிழந்து விட்டதாலும், வயோதிகம் காரணமாகவும் இறந்து விட்டார்.

சொந்தமும் போச்சு பந்தமும் போச்சு!
இதை அடுத்து தன்னுடைய ஒரே மகளுடன் வாழ்ந்து வந்தார் மினாட்டி. சொத்துக்கள் எவ்வளவு இருந்தபோதும், சோதனை மேல் சோதனை என்பது போல் அவரது மகளும் 25 வயதிலேயே நெஞ்சு வலி ஏற்பட்டு இறந்துவிட்டார்.
அனைத்து சொந்தங்களையும் இழந்து அனாதைப் போல் ஆன மினாட்டிக்கு உற்றார் உறவினர் யாரும் ஆதரவு தர முன்வரவில்லை. உறவினர்கள் என்ற போர்வையில் அவரது சொத்தை ஆட்டையை போடுவதிலேயே குறியாக இருந்த பலர் அது நடக்காது என்று தெரிந்ததும் மினாட்டியை தன்னந்தனியே கழட்டிவிட்டு சென்றனர்.

ஏழைக்கு உதவ முடிவு
இதனால் மனஉளைச்சலுக்கு ஆளான மினாட்டி தீர்க்கமாக ஒரு முடிவெடுத்தார். சொத்துக்காக இருக்கும் உறவுகளை விட விசுவாசமாக இருப்பவர்களுக்கு தன்னுடைய சொத்தை ஏன் தரக்கூடாது என முடிவெடுத்தார். அப்போது அவருக்கு தோன்றிய பெயர் ஒன்றே ஒன்றுதான். அவர்தான் ரிக்ஷா ஓட்டுநர் புத்த சமாலின் குடும்பம். கடந்த 25 ஆண்டுகளாக விசுவாசமாக இருந்த புத்த சமாலுக்கு தன்னுடைய சொத்துக்களை எழுதி தர முடிவெடுத்தார். இதற்காக வழக்கறிஞர்களின் ஆலோசனை கேட்ட மினாட்டி தனக்கென இருந்த வீடு, தங்க நகைகள் என ரூபாய் 1 கோடி மதிப்புள்ள சொத்துக்களை ரிக்ஷா ஓட்டுநரின் குடும்பத்திற்கு தந்துவிட்டார்.

மிரட்டக்கூடாது என உயில்
மேலும் தன்னுடைய மரணத்திற்கு பிறகு சொத்துக்காக புத்த சமாலை யாரும் மிரட்டக்கூடாது எனவும் உயில் எழுதி வைத்துவிட்டார். கடந்த 25 வருடமாக மினாட்டியின் மகளை பள்ளி, கல்லூரிக்கு பத்திரமாக அழைத்து சென்று வந்தவர் புத்த சமால். அவருக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

நேர்மைக்கு பரிசு
அன்றாடம் வரும் வருமானத்தில் குடும்பத்தை நடத்தி வந்த புத்த சமாலுக்கு பலன் எதுவும் எதிர்பாராமல் உழைத்ததால் கடவுள் கொடுத்த பரிசாக இது கிடைத்துள்ளது. 25 வருடமாக நேர்மையாக உழைத்த உழைப்பாளியின் நேர்மைக்கு கொடுக்கப்பட்ட இந்த பரிசு பலரையும் நெகிழ்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.












Click it and Unblock the Notifications