சோனியா மருமகன் வதேராவின் நிலக் கொள்ளை: விசாரிக்க கமிஷன் அமைத்த ஹரியானா அரசு!!
சண்டிகர்: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேராவின் நிலக்கொள்ளை குறித்து ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்படும் என்று ஹரியானா அரசு அதிரடியாக அறிவித்துள்ளது.
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு காலத்தில் ஹரியானாவில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தது. அப்போது விவசாயிகளிடம் இருந்து மிகவும் சொற்பமான விலைக்கு நிலத்தை அரசு அதிகாரிகள் உதவியுடன் பறித்து சோனியாவின் மகள் பிரியங்காவின் கணவரான ராபர்ட் வதேராவின் நிறுவனங்களுக்கு கொடுக்கப்பட்டது.

ராபர்ட் வதேராவோ மிக சொற்பமான விலைக்கு வாங்கிய நிலத்தை டி.எல்.எப். போன்ற தனியார் நிறுவனங்களுக்கு பல கோடி ரூபாய்க்கு விற்று லாபமடைந்தார். இதனை ஹரியானா அரசு அதிகாரி அசோக் கெம்கா முதன் முதலில் அம்பலப்படுத்தினார். இதனைத் தொடர்ந்து அப்போதைய ஹரியானா அரசு கெம்காவுக்கு இடமாற்றம் உள்ளிட்ட குடைச்சலைக் கொடுத்தது.
ஹரியானாவில் மட்டுமின்றி காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்த மாநிலங்களிலும் அரசு அதிகாரத்தை முறைகேடாக பயன்படுத்தி ராபர்ட் வதேராவின் நிலக்கொள்ளை தொடர்ந்தது. இது நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை கிளப்பியிருந்தது.
மத்தியில் பாரதிய ஜனதா அரசு அமைந்தவுடன் ராபர்ட் வதேரா தமது பெயரிலான நிறுவனங்களை கலைத்துவிட்டார். இந்த நிலையில் ஹரியானாவில் சட்டசபை தேர்தல் நடைபெற்றது. அத்தேர்தலின் போது வதேராவின் நிலக்கொள்ளை விவகாரத்தை கையிலெடுத்த பாரதிய ஜனதா தாங்கள் ஆட்சியில் அமர்ந்தால் உரிய நடவடிக்கை எடுப்போம் என வாக்குறுதி அளித்தது.
அதன்படி ஹரியானாவில் பாரதிய ஜனதா அரசு ஆட்சியைக் கைப்பற்றிய உடனேயே ராபர்ட் வதேராவின் நிலக்கொள்ளை குறித்து விசாரிக்கப்படும் என்று கூறப்பட்டது.
இந்நிலையில்தான் ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் ராபர்ட் வதேராவின் நிலக்கொள்ளை குறித்து முழுமையாக விசாரணை நடத்த கமிஷன் அமைக்கப்படும் என்று ஹரியானாவின் மூத்த அமைச்சர் ராம்பிலாஸ் சர்மா தெரிவித்துள்ளார்.
ஹரியானா அரசின் இந்த அதிரடி காங்கிரஸ் மேலிடத்தை கதிகலங்க வைத்துள்ளது.












Click it and Unblock the Notifications