புதிய சர்ச்சை... அவசர சட்டம் மூலம் பிரதமரின் முதன்மை செயலர் மிஸ்ரா நியமனம் ..காங், கேள்வி!!
உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த 1967-ம் ஆண்டு பிரிவைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி 69 வயதான நிருபேந்திர மிஸ்ரா ஆவார். இவர் மத்திய அரசில் பல்வேறு முக்கிய பதவிகளை வகித்து உள்ளார். கடைசியாக மத்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் அமைப்பின் தலைவராக இருந்தார்.
கடந்த 2009-ம் ஆண்டு மிஸ்ரா அந்த பதவியில் இருந்து ஓய்வு பெற்றார். அவர் நேற்று பிரதமர் நரேந்திர மோடியின் முதன்மை செயலாளராக நியமிக்கப்பட்டார்.
அவசர சட்டம்
டிராய் அமைப்பில் தலைவர் அல்லது உறுப்பினராக பதவி வகித்து ஓய்வு பெற்றவர்கள் அதன்பிறகு மத்திய அரசிலோ அல்லது மாநில அரசிலோ வேறு எந்த பதவிக்கும் நியமிக்க முடியாது என்கிறது டிராய் சட்டம். அதாவது பதவிக்காலம் முடிந்த பின்னர் அவர்கள் வேறு பதவி வகிக்க டிராய் சட்டம் தடை விதிக்கிறது.
அந்த தடையை நீக்கி டிராய் சட்டத்தில் திருத்தம் செய்யும் வகையில் அவசர சட்டம் ஒன்றை நேற்று மத்திய அரசு பிறப்பித்து அதன் அடிப்படையில் நிருபேந்திர மிஸ்ராவை பிரதமரின் முதன்மை செயலாளராக நியமித்து உள்ளது.
ஸ்பெக்ட்ரம் வழக்கு
ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் நிருபேந்திர மிஸ்ரா முக்கிய சாட்சிகளில் ஒருவர் ஆவார். மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் தயாநிதி மாறன் தொலைத்தொடர்பு துறை அமைச்சராக இருந்த போது நிருபேந்திர மிஸ்ரா தொலைத்தொடர்பு துறையின் செயலாளராக இருந்தார். ஆ.ராசா தொலைத்தொடர்பு துறை அமைச்சராக இருந்த போது, டிராய் தலைவராக பதவி வகித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அவசர சட்டம் ஏன்?
இதனிடையே நாட்டின் நாடாளுமன்றம் இன்னும் கூடவில்லை.. புதிய எம்.பிக்கள் பதவியேற்கவில்லை.. இந்த நிலையில் அவசர சட்டம் மூலம் பிரதமரின் முதன்மை செயலரை அவசரம் அவசரமாக நியமிக்க வேண்டிய தேவை என்ன? என்று காங்கிரஸ் மூத்த தலைவர் அஜய் மக்கான் கேள்வி எழுப்பி மற்றொரு சர்ச்சைக்கு வித்திட்டிருக்கிறார்.