ATMஇல் கூட கிடைக்காத ரூ.2000 நோட்டுகள்.. திரிணாமுல் அமைச்சரின் நண்பர் வீட்டில் ரூ.20 கோடி பறிமுதல்
கொல்கத்தா: மேற்கு வங்க திரிணாமுல் அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜியின் நெருங்கிய கூட்டாளியான அர்பிதா முகர்ஜியின் வீட்டில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
மேற்கு வங்கத்தில் இப்போது மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு தொழில்துறை அமைச்சராக இருப்பவர் பார்த்தா சாட்டர்ஜி.
இவர் பள்ளி சர்வீஸ் ஆணையம் ஆட்சேர்ப்பில் ஊழல் செய்ததாகப் புகார்கள் எழுந்தது. இது தொடர்பாக அமலாக்கத் துறையும் விசாரித்து வருகிறது.

கட்டுக்கட்டாக நோட்டுகள்
இந்த விவகாரத்தில் அமலாக்கத் துறையினர் இன்று பல்வேறு இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர். அதன்படி திரிணாமுல் அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜியின் நெருங்கிய நண்பரான அர்பிதா முகர்ஜியின் வளாகத்தில் இன்று அமலாக்கத் துறை சோதனை நடத்தினர். பல மணி நேரம் நீடித்த இந்த சோதனையில் அவரது வீட்டில் இருந்து, கட்டுக்கட்டாக பணத்தை அமலாக்கத் துறையினர் பறிமுதல் செய்தனர்.

20 கோடி ரூபாய்
மொத்தம் 20 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டதாக அமலாக்கத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அர்பிதா முகர்ஜியின் வீட்டில் இருந்து மீட்கப்பட்ட ரூ.500 மற்றும் ரூ.2000 நோட்டுகளின் புகைப்படங்கள் இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. இது தொடர்பாக அமலாக்கத் துறையினர் கூறுகையில், "கைப்பற்றப்பட்ட பணத்தை எண்ண வங்கி அதிகாரிகளிடம் பணம் எண்ணும் இயந்திரங்களைக் கேட்டுள்ளோம். அர்பிதா முகர்ஜியின் வளாகத்தில் இருந்து மொத்தம் 20க்கும் மேற்பட்ட மொபைல் போன்கள் மீட்கப்பட்டுள்ளன" என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

முக்கிய ஆவணங்கள்
அவரது வீட்டில் மட்டுமின்றி பல்வேறு அதிகாரிகள், முன்னாள் அதிகாரிகளின் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டன. அதில் பல்வேறு இடங்களில் இருந்து பல முக்கிய ஆவணங்கள், பதிவுகள், மின்னணு சாதனங்கள், வெளிநாட்டுப் பணம் மற்றும் தங்கம் ஆகியவையும் மீட்கப்பட்டு உள்ளதாக அமலாக்கத் துறை தெரிவித்து உள்ளது. இது தொடர்பாக அடுத்தகட்ட விசாரணை நடைபெற்று வருகிறது.

அமலாக்கத் துறை சோதனை
அதேபோல மேற்கு வங்க அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜியின் வீட்டிலும் அமலாக்கத் துறை சோதனை நடத்துகிறது. மேலும், கூச் பிகார் மாவட்டத்தில் உள்ள கல்வி அமைச்சர் பரேஷ் அதிகாரியின் வீட்டிலும் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனையை நடத்தினர். முன்னதாக இருவரிடமும் இது தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது. முன்னதாக இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கும்படி சிபிஐ அதிகாரிகளுக்குக் கொல்கத்தா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications