நடுச்சாமத்தில் கமுக்கமாக மது விற்பனை: பிரபல டிஸ்கோதெக்கிற்கு ரூ.20 லட்சம் 'ஃபைன்'
சன்டிகர்: சன்டிகரில் உள்ள டிக்ஸோதெக் ஒன்று அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கு பிறகு மது விற்பனை செய்ததால் அதற்கு ரூ.20 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
பிரபல 5 நட்சத்திர ஹோட்டல் நிர்வாகம் நடத்தும் டிஸ்கோதெக்கான கிட்டி-சூ என்பது சன்டிகரில் உள்ளது. அந்த டிஸ்கோதெக்கில் அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கு பிறகும் மது விற்பனை செய்யப்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் போலீசார் இரவு 1.30 மணிக்கு அந்த டிஸ்கோதெக்கிற்கு சென்று சோதனை நடத்தியுள்ளனர்.
இது குறித்து கலால் மற்றும் வரி விதிப்பு கமிஷனர் காஷிஷ் மிட்டல் கூறுகையில்,
போலீசார், கலால் மற்றும் வரி விதிப்பு துறை அதிகாரிகள் கிட்டி சூவுக்கு இரவு 1.30 மணிக்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது அனுமதிக்கப்பட்ட நேரமான 1 மணிக்கு பிறகும் மது விற்பனை செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. மது விற்பனை செய்யப்பட்டதற்கான ரசீதுகள் கிடைத்தன.
இதையடுத்து அந்த டிஸ்கோதெக்கிற்கு ரூ.20 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டதுடன் அதன் உரிமம் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளது. இது போன்று இனி அடிக்கடி சோதனைகள் நடத்தப்படும் என்றார்.