ஆண்டுதோறும் போலீஸ், டிராபிக் போலீஸுக்கு லஞ்சம் மட்டும் ரூ.22,000 கோடி
டெல்லி: சாலைகளில் செல்லும் வாகன ஓட்டிகள் அதிகாரிகளுக்கு ஆண்டுதோறும் ரூ.22,000 கோடி லஞ்சம் கொடுப்பது தெரிய வந்துள்ளது.
ஊடக படிப்புகளுக்கான மையம்(சென்டர் ஃபார் மீடியா ஸ்டடீஸ்) லூதியானா, டெல்லி, அகமதாபாத், இந்தூர், மும்பை, கொல்கத்தா, விஜயவாடா, பெங்களூர் மற்றும் சென்னையில் சுமார் 1,200 டிரக் டிரைவர்களிடம் அவர்கள் போக்குவரத்து அதிகாரிகளுக்கு எவ்வளவு லஞ்சம் கொடுக்கிறார்கள் என்று ஒரு ஆய்வு நடத்தப்பட்டது.
இந்த ஆய்வில் அதிர்ச்சிகரமான தகவல் கிடைத்துள்ளது.
ஆண்டுக்கு ரூ.22,000 கோடி
டிரக், கன ரக வாகன டிரைவர்களிடம் இருந்து போக்குவரத்து அதிகாரிகள், போலீசார் பெறும் லஞ்சத் தொகை மட்டும் ஆண்டுக்கு ரூ.22,000 கோடி என்று தெரிய வந்துள்ளது.
போலீசாரால் எரிச்சல்
சாலைகளில் செல்லும் டிரக் மற்றும் கனரக வாகன ஓட்டிகளில் 77 சதவீதம் பேருக்கு போலீசாரால் தான் பெரிய தலைவலியாம். மேலும் போக்குவரத்து துறை அதிகாரிகள் தங்களை படாதபாடு படுத்துவதாக 73 சதவீத டிரைவர்கள் தெரிவித்துள்ளனர்.
காரணம் இல்லாமல்
போலீசார் மற்றும் போக்குவரத்து அதிகாரிகள் பல நேரங்களில் வாகனங்களை காரணம் இல்லாமல் நிறுத்தி பணம் பறிக்கிறார்கள் என்று 60 சதவீத டிரைவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த லஞ்ச பணத்தில் 45 சதவீத தொகை போலீசாருக்கும், 43 சதவீத தொகை ஆர்.டி.ஓ.வுக்கும், 13 சதவீத தொகை பிறருக்கும் செல்கிறதாம்.
தப்பிக்கவும் தான் லஞ்சம்
முறையான ஆவணங்கள் இல்லாமல் செல்லும்போது தண்டனையில் இருந்த தப்பிக்க லஞ்சம் கொடுப்பதாக டிரைவர்கள் தெரிவித்துள்ளனர். போக்குவரத்து துறை அதிகாரிகள் பதிவு எண் மற்றும் பிட்னஸ் சர்டிபிகேட் வழங்க, பெர்மிட்டை புதுப்பிக்க அதிக அளவில் லஞ்சம் பெறுகின்றனராம்.