இடஒதுக்கீட்டு கொள்கையை மறுபரிசீலனை செய்க: சொல்வது ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்!
டெல்லி: இடஒதுக்கீட்டு கொள்கையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்கு ஆர்.எஸ்.எஸ். இயக்கத் தலைவர் மோகன் பகவத் வலியுறுத்தியுள்ளார்.
குஜராத்தில் படேல் சமூகத்தினர் இடஒதுக்கீடு கோரி போராட்டம் நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் கூறியுள்ளதாவது:
இடஒதுக்கீடு என்பதை அரசியல் காரணங்களுக்காக பயன்படுத்துகின்றனர். இதனை முடிவுக்குக் கொண்டுவர இடஒதுக்கீட்டு முறையை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
அத்துடன் அரசியல் சாராத ஒரு குழுவை அமைத்து யாருக்கு இடஒதுக்கீடு தேவை? எவ்வளவு காலத்துக்கு தேவை என்பது குறித்து ஆராய வேண்டும்.
ஒரு குறிப்பிட்ட இன மக்களின் போராட்டத்திற்கு பணிந்து இடஒதுக்கீடு கொண்டுவரப்பட்டால், இடஒதுக்கீடு அரசியலாக்கப்பட்டு விடும். அதேபோல் கல்வி திட்டத்திலும் மாற்றம் ஏற்பட வேண்டும்.
இவ்வாறு மோகன் பகவத் கூறியிருந்தார்.
நாடு முழுவதும் மோகன் பகவத்தின் இந்த கருத்து பெரும் சர்ச்சையை கிளப்பியது. இது குறித்து ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத், தனது குரு மோகன் பகவத் அட்வைஸ்படி இடஒதுக்கீட்டை ரத்து செய்யப்படுமா? என்பதை பிதமர் மோடி தெளிவுப்படுத்த வேண்டும்.
நாங்கள் இடஒதுக்கீட்டை மக்களின் விகிதாச்சாரத்துக்கு ஏற்றபடி அதிகரிப்போம். மோடி தாய்ப்பால் குடித்திருந்தால் இடஒதுக்கீட்டை ரத்து செய்யட்டும். அப்போது அனைவரும் அவரின் பலத்தை தெரிந்துகொள்வார்கள் என்று கொந்தளித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து ஆர்.எஸ்.எஸ். இயக்கம் ஒரு விளக்கம் அளித்தது. அதில், ஆர்.எஸ்.எஸ். விளக்கம் அளித்துள்ளது. இடஒதுக்கீடு பற்றி மோகன் பகவத் கருத்து தெரிவிக்கவில்லை. சமுதாயத்தில் நலிவடைந்த பிரிவை சேர்ந்தவர்களுக்கு அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படையில் ஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும் என்றுதான் மோகன் பகவத் வலியுறுத்தி உள்ளார் எனக் கூறியுள்ளது.