நேதாஜியை இந்து தேசியவாதியாக சித்தரிக்க முயல்கிறது ஆர்.எஸ்.எஸ்: தருண் கோகாய் குற்றச்சாட்டு
குவஹாத்தி: சுதந்திர போராட்டத்தில் பங்கெடுக்காத ஆர்.எஸ்.எஸ் அமைப்பானது, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸை ஹிந்து தேசியவாதியாக தலைவராக சித்தரிக்க முயலுவதாக அஸ்ஸாம் மாநில முதல்வர் தருண் கோகாய் கூறியுள்ளார்.
நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 120வது பிறந்தநாளான கடந்த சனிக்கிழமை அவரது மரணம் தொடர்பான 100க்கும் மேற்பட்ட ஆவணங்களை, நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி வெளியிட்டார். இந்த ஆவணங்கள் அனைத்தும் தேசிய ஆவணக் காப்பகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில், நேதாஜியின் பிறந்தநாளன்று ஆர்.எஸ்.எஸ் தெரிவித்த கருத்து குறித்து பேசிய அஸ்ஸாம் முதல்வர் தருண் கோகாய், "நேதாஜியை இந்து தேசியவாதியாக தலைவராக சித்தரிக்க முயல்வதாக" குற்றம்சாட்டினார்.
மேலும் அவர் கூறுகையில், நேதாஜி நாட்டின் மிகவும் முக்கியமான சமயசார்பற்ற விடுதலை போராட்ட வீரர். அவர் ஒருபோதும் மத அடிப்படை வாதத்தை முன்னெடுத்ததில்லை.சர்தார் வல்லபாய் பட்டேலையும் இந்து தலைவராக ஆர்.எஸ்.எஸ் கூறுகிறது. ஆனால் காந்திஜியின் கொலைக்கு ஆர்.எஸ்.எஸ் தான் காரணம் என்று எப்போதும் பட்டேல் விமர்சித்தே வந்தார்.
நம் எல்லோருக்கும் தெரியும் காந்தியை யார் கொன்றது என்று. கோட்சே ஒரு ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர். மோடியை போல் தனக்கு முன்னாள் இருந்த பிரதமர்களை விமர்சித்தவர் யாரும் இல்லை. இவ்வாறு தருண் கோகாய் தெரிவித்தார்