கேஜ்ரிவால் அலுவலகத்தில் சி.பி.ஐ. ரெய்டு விவகாரம்... நாடாளுமன்றத்தில் கடும் அமளி- ஜேட்லி விளக்கம்!
டெல்லி: டெல்லி முதல்வர் கேஜ்ரிவால் அலுவலகத்தில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்திய விவகாரத்தால் நாடாளுமன்றத்தின் லோக்சபா, ராஜ்யசபாவில் கடும் அமளி ஏற்பட்டது. டெல்லி தலைமை செயலகத்தில்தான் சோதனை நடத்தப்படுகிறது; கேஜ்ரிவால் அலுவலகத்தில் இல்லை என்று ராஜ்யசபாவில் அமளிக்கிடையே மத்திய அமைச்சர் அருண்ஜேட்லி விளக்கம் அளித்தையும் மீறி அமளி தொடர்ந்தது.
டெல்லி தலைமை செயலகத்தில் இன்று காலை சி.பி.ஐ. அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது டெல்லி முதல்வர் கேஜ்ரிவால் அலுவலகத்தை பூட்டி சீல் வைத்து சோதனை நடத்தப்பட்டதாகவும் கூறப்பட்டது.
ஆனால் டெல்லி அரசின் முதன்மை செயலாளர் ராஜேந்திர குமார் மீதான பழைய ஊழல் புகார் ஒன்றின் விசாரணைக்காக தலைமை செயலகத்தில் மட்டும் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் நாடாளுமன்ற லோக்சபா மற்றும் ராஜ்யசபாவில் இன்று எதிரொலித்தது.
லோக்சபாவில் இந்த விவகாரத்தை ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகளின் எம்.பி.க்கள் எழுப்பியபோது சபாநாயகர் சுமித்ரா மகாஜன் அனுமதி மறுத்தார். ராஜ்யசபாவிலும் இந்த விவகாரத்தை முன் வைத்து போல் அமளி ஏற்பட்டது.
டெல்லி முதல்வர் கேஜ்ரிவால் அலுவலகத்தில் சி.பி.ஐ. ரெய்டு நடத்தியது குறித்து அரசு உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்று திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் எம்.பி.க்கள் வலியுறுத்தினர்.
அப்போது குறுக்கிட்டுப் பேசிய நிதி அமைச்சர் அருண்ஜேட்லி, டெல்லி முதல்வர் கேஜ்ரிவால் அலுவலகத்தில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தவில்லை. ராஜேந்திர குமார் மீதான ஊழல் புகார் மீதான விசாரணைக்காக தலைமைச் செயலகத்தில் சோதனை நடத்தப்பட்டது என கூறினார்.
ஆனால் அவரது விளகக்த்தை எம்.பி.க்கள் ஏற்க மறுத்ததால் சபை சிறிது நேரம் ஒத்திவைக்கப்பட்டது.
FM lied in Parliament. My own office files are being looked into to get some evidence against me. Rajender is an excuse
— Arvind Kejriwal (@ArvindKejriwal) December 15, 2015
கேஜ்ரிவால் சீற்றம்
நிதி அமைச்சர் அருண் ஜேட்லியின் இந்த விளக்கத்தை கேஜ்ரிவால் நிராகரித்துள்ளார். இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள கேஜ்ரிவால், நிதி அமைச்சர் அருண்ஜேட்லி நாடாளுமன்றத்தில் பொய்யான தகவலை தெரிவித்துள்ளார். என்னுடைய சொந்த அலுவலகத்தில் எனக்கு எதிராக ஆவணங்கள் கிடைக்காதா எனவும் சோதனை நடத்தப்பட்டுள்ளது. ராஜேந்திர குமார் பெயரை மத்திய அரசு பயன்படுத்துவது சமாளிப்புக்காகத்தான் என கொந்தளித்துள்ளார்.
இதனிடையே சி.பி.ஐ. சோதனைக்கும் பிரதமர் மோடிக்கும் தொடர்புபடுத்தி கேஜ்ரிவால் கருத்து தெரிவித்ததற்கு மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு கண்டனம் தெரிவித்துள்ளார். எந்த ஒரு சம்பவத்துக்கும் பிரதமர் மோடியை தொடர்புபடுத்தி பேசுவதே கேஜ்ரிவாலுக்கு வாடிக்கையாகப் போய்விட்டது என சாடியுள்ளார்.