சந்திரயான் 3-க்கு போட்டியா? யாரும் எதிர்பார்க்கலயே.. ரஷ்யாவா இப்படி பண்ணுது.. முன்பே தரையிறங்குகிறதா
மாஸ்கோ: இஸ்ரோவின் சந்திரயான் விண்கலம் நிலவின் தென் துருவத்தில் வரும் ஆகஸ்ட் 23 ஆம் தேதி தரையிறங்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், ரஷ்யாவும் நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக லூனா -25 என்ற விண்கலத்தை விண்ணில் ஏவ திட்டமிட்டுள்ளது.
நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ, சந்திரயான்-2 என்ற விண்கலத்தை கடந்த 2019 ம் ஆண்டு விண்ணில் செலுத்தியது. பல்வேறு கட்ட பயணங்களுக்கு பின்பு சந்திரயான்-2 விண்கலம், 2019 ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நிலவின் சுற்றுப் பாதையை சென்றடைந்தது. இருந்த போதிலும், கடைசி நேரத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறால் திட்டமிட்டபடி லேண்டர் கலன் தரையிறங்காமல் நிலவில் மோதி செயலிழந்தது.

எனினும், விண்கலத்தின் மற்றொரு பகுதியான ஆர்பிட்டர் நிலவின் சுற்றுப் பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது. தோல்வியில் இருந்து பாடம் கற்றுக்கொண்ட இஸ்ரோ, ரூ.615 கோடியில் சந்திரயான்-3 விண்கலத்தை வடிவமைத்துள்ளது. இந்த விண்கலம் எல்விஎம்-3 எம்-4 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள 2ஆம் ஏவுதளத்தில் இருந்து ஜூலை 14ஆம் தேதி மதியம் 2.35 மணியளவில் விண்ணில் ஏவப்பட்டது.
ரஷ்யா அனுப்பும் விண்கலம்: சந்திரயான் - 3 வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. நிலவை நோக்கிய பயணத்தை வெற்றிகரமாக சந்திரயான் -3 விண்கலம் கடந்து கொண்டு இருக்கிறது. தற்போது நிலவின் சுற்றுவட்டப்பாதையில் சுற்றி வரும் சந்திரயான் 3, வரும் ஆகஸ்ட் 23 ஆம் தேதி நிலவின் தென் துருவத்தில் சாப்ட் லேண்டிங் முறையில் தரையிறங்க உள்ளது. அதன்பிறகு விண்கலத்தில் உள்ள ரோவர் கலம், நிலவின் மேற்பரப்பில் சென்று ஆய்வு மேற்கொள்ள உள்ளது.
நிலவு ஆராய்ச்சில் அமெரிக்கா, ரஷ்யா, சீனா உள்ளிட்ட நாடுகள் மேற்கொண்டு இருந்தாலும் தென் துருவத்தில் இதுவரை எந்த நாடும் ஆய்வு மேற்கொண்டது இல்லை. இதனால், சந்திரயான் 3 விண்கலம் மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. இந்த நிலையில், திடீர் திருப்பமாக ரஷ்யாவும் நிலவின் தென் துருவத்திற்கு விண்கலம் ஒன்றை ஏவப்போவதாக கூறப்படுகிறது.
லூனா -25: ஆகஸ்ட் 11 ஆம் தேதி Luna-25 திட்டம் மூலமாக நிலவுக்கு ரஷ்யா விண்கலத்தை அனுப்புவதாகவும் இந்த விண்கலமும் சந்திரயான் தரையிறங்க திட்டமிட்டுள்ள அதே நாளில் அதாவது ஆகஸ்ட் 23 ஆம் தேதி நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு இருக்கிறதாம். ரஷ்யாவின் கிழக்கு பகுதியில் உள்ள வோஸ்டோச்னி காஸ்மோட்ரோம்( Vosthochny cosmodrome) ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து லூனா -25 என்ற இந்த விண்கலம் செலுத்தப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
சந்திரயான் -3 விண்கலம் தென் துருவத்தில் எப்படி தரையிறங்குமோ அதே போன்று இந்த விண்கலமும் தரையிறங்க இருப்பதாக சொல்லப்படுகிறது. அதாவது தென் துருவத்தில் சாப்ட் லேண்டிங் முறையில் தரையிறக்கப்படலாம் என்று தெரிகிறது. ரஷ்யா 47 ஆண்டுகளுக்கு பிறகு நிலவை ஆய்வு செய்ய விண்கலம் அனுப்ப உள்ளது. 1976 ஆம் ஆண்டு முதல் முதலாக நிலவிற்கு ரஷ்யா விண்கலம் அனுப்பியது.
இந்தியாவுக்கு போட்டியா?: அதன்பிறகு ரஷ்யா தற்போதுதான் இந்த லூனா 25 விண்கலத்தை அனுப்ப உள்ளது. லூனா 25 ஐந்து முதல் ஏழு நாட்களில் நிலவின் திட்டமிட்ட பகுதியில் தரையிறங்கும் என ரஷ்ய விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். லூனா -25 , 1.8 டன்கள் எடை கொண்டது என்றும் இதில் 31 கிலோ எடையில் சயிண்டிபிக் உபகரணங்கள் கொண்டு செல்லப்படுவதாகவும் ரஷ்ய விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.
நிலவின் பாறைகளில் மாதிரிகளை சேகரித்து நீர் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளனவா என்பதை இந்த விண்கலம் ஆய்வு செய்யும் என்றும் கடந்த 2021 ஆம் ஆண்டே இந்த விண்கலத்தை ஏவ திட்டமிட்டு இருந்ததாகவும் ஆனால், பல்வேறு காரணங்களால் தாமதம் ஆகிவிட்டதாகவும் ரஷ்ய விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். ரஷ்யா திட்டமிட்டபடி நாளை லுனா 25- விண்கலத்தை செலுத்தும் பட்சத்தில் இந்த விண்கலம் குறுகிய நாளில் நிலவை சென்றடையும்.
எந்த விண்கலம் முதலில் தரையிறங்கும்?: தென் துருவத்தில் எந்த விண்கலம் முதலில் இறங்குகிறதோ அதுவே மனித வரலாற்றில், தென் துருவத்தில் தரையிறங்கிய முதல் விண்கலம் என்ற சாதனையை நிகழ்த்தும். நிலவின் தென் துருவத்தில் பனிப்பாறைகள் நிறைந்து உள்ளன. எதிர்காலத்தில் இந்த பனிக்கட்டிகளில் இருந்து ஆக்சிஜன் மற்றும் எரிபொருளை பிரித்தெடுத்து பயன்படுத்த முடியும் என்ற நம்பிக்கை இருப்பதால், இது மிகவும் முக்கியத்துவமானதாக பார்க்கப்படுகிறது.
விண்வெளியில் மேற்கொள்ளப்படும் எந்த ஒரு ஆராய்ச்சியும் கண்டுபிடிப்பும் ஒட்டு மொத்த மனித குலத்திற்கே பயன்படும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. எனினும், இந்தியாவின் விண்கலம் தரையிறங்கும் அதே நாளில் ரஷ்யாவும் தனது விண்கலத்தை தென் துருவத்தில் தரையிறக்க முனைப்பு காட்டுவது பல்வேறு கேள்விகளையும் எழ வைக்காமல் இல்லை.












Click it and Unblock the Notifications