சபரிமலை ஐயப்பன் கோவில் மண்டலபூஜை இன்று நடை திறப்பு: 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு
சபரிமலை: சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவில் மண்டலபூஜைக்காக இன்று மாலை நடை திறக்கப்பட உள்ளது. ஐயப்பன் கோவிலுக்கு தீவிரவாதிகள் அச்சுறுத்தல் இருப்பதால் மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் மாதப்பிறப்பு அன்று நடைதிறப்பது வழக்கம். கார்த்திகை, மார்கழி மாதம் மண்டல பூஜை, மகரவிளக்கு பூஜையை ஒட்டி தினந்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்காக கூடுவார்கள். மண்டல பூஜைக்காக இன்று மாலை ஐயப்பன் கோவில் நடைதிறக்கப்படுகிறது.
கோவில் நடை திறப்பு
41நாட்கள் ஐயப்பன் கோவில் நடைதிறந்திருக்கும். இந்த ஆண்டு வருகிற டிசம்பர் மாதம் 27ஆம்தேதி மண்டல பூஜை நடைபெறுகிறது. இதையொட்டி தந்தரி கண்டரரு ராஜீவரரு தலைமையில் மேல்சாந்தி நாராயணன் நம்பூதிரி கோவில் இன்று கோவில் நடையை திறந்து வைக்கிறார்.
பதவியேற்பு
இன்று கோவில் தூய்மை பணியும் சுவாமி ஐயப்பனுக்கு தீபாராதனையும் மட்டும் நடைபெறும். அதை தொடர்ந்து இரவு 7 மணிக்கு சபரிமலை அய்யப்பன் கோவில் புதிய மேல்சாந்தியாக கிருஷ்ணதாஸ் நம்பூதிரியும், மாளிகைபுரத்து அம்மன் கோவில் மேல்சாந்தியாக கேசவன் நம்பூதிரியும் பதவி ஏற்கிறார்கள். அவர்களுக்கு தந்திரி கண்டரரு ராஜீவரரு பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்.
நெய் அபிஷேகம்
நாளை அதிகாலை 4 மணிக்கு சுவாமி அய்யப்பன் கோவில் நடை திறக்கப்பட்டு அய்யப்பனுக்கு நெய் அபிஷேகம் உள்பட அனைத்து பூஜைகளும் நடைபெறும். 41 நாட்களுக்கு இந்த பூஜைகள் நடைபெறும்.
பக்தர்களுக்கு கட்டுப்பாடு
கோவில் நடை திறப்பையொட்டி இன்று காலை முதலே இருமுடி கட்டிய பக்தர்கள் சபரிமலையில் குவியத் தொடங்கி உள்ளனர். பக்தர்கள் வசதிக்காக தேவஸ்தானம் போர்டு பல்வேறு ஏற்பாடுகளை செய்துள்ளது. மேலும் பக்தர்களுக்கு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளது.
பம்பை நதியின் தூய்மை
புனித நதியான பம்பையின் தூய்மையை பாதுகாக்க வேண்டும். புனித நீராடிய பிறகு ஆடைகளை ஆற்றில் போட்டு செல்லக்கூடாது. பத்மதீர்த்தத்தில் நீராடும் பக்தர்கள் சோப்பு, எண்ணை, சாம்பு போன்றவற்றை கண்டிப்பாக பயன்படுத்தக்கூடாது.
தீ மூட்டும் பக்தர்கள்
வனப்பகுதியில் உணவுக்காக தீ மூட்டும்போது தீயை முழுவதுமாக அணைத்து விட்டதை உறுதி செய்து கொண்ட பிறகுதான் பக்தர்கள் செல்ல வேண்டும். விதிமுறைகளை மீறும் பக்தர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் தேவஸ்தானம் போர்டு திட்டமிட்டுள்ளது.
ஆன்லைன் பதிவு
பக்தர்கள் ஆன்லைன் மூலம் திருவிதாங்கூர் தேவஸ்தானம் போர்டில் பதிவு செய்தால் அரவணை, அப்பம், விபூதி பிரசாதம் தபால் மூலம் அனுப்பப்படும்.
3 அடுக்குபாதுகாப்பு
சபரிமலை கோவிலுக்கு ஏற்கனவே தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் உள்ளதால் அங்கு 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், சபரிமலை வரும் அனைத்து வாகனங்களும் தீவிர சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படும் என்றும், கேரள உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னிதலா தெரிவித்துள்ளார்.
சூடம் ஏற்ற தடை
இதனிடையே சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் ரயிலில் சூடம் ஏற்றினால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ரயில்வே துறை கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
நடவடிக்கை பாயும்
சபரிமலைக்கு ரயில்களில் பக்தர்கள் கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் ஓடும் ரயிலில் சூடம் ஏற்றி வழிபாடு நடத்துவது வழக்கம். அவ்வாறு செய்வதால் ரயிலில் தீ விபத்து ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளதாக கருதப்படுவதால் சூடம் ஏற்றுவதற்கு ரயில்வே துறை தடை விதித்துள்ளது. தடையை மீறி கற்பூரம் ஏற்றினால் ரயில்வே பாதுகாப்பு சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ரயில்வே போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.