முதல்முறையாக இன்று ரயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்த சதானந்த கவுடா
டெல்லி: மத்திய ரயில்வே துறை அமைச்சர் சதானந்த கவுடா தனது முதல் ரயில்வே பட்ஜெட்டை இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் திங்கட்கிழமை துவங்கியது. அவை கூடியதும் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வை கண்டித்து எதிர்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் ஒரு பணியும் செய்யாமல் லோக்சபா நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது.
இந்நிலையில் 2014ம் ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட்டை மத்திய ரயில்வே துறை அமைச்சர் சதானந்த கவுடா தாக்கல் செய்தார். அவர் ரயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்தது இதுவே முதல் முறையாகும்.

தனது பட்ஜெட்டில் அவர் ரயில்களில் அளிக்கப்படும் வசதிகளை மேம்படுத்துவது, சுத்தம், சுகாதாரம் மற்றும் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளித்துள்ளார்.
முன்னதாக கடந்த 20ம் தேதி ரயில் கட்டணம் ஒரேயடியாக உயர்த்தப்பட்டது. பயணிகள் கட்டணம் 14.2 சதவீதமும், சரக்கு கட்டணம் 6.5 சதவீதமாகவும் உயர்த்தப்பட்டது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு பதவியேற்ற ஒரு மாதத்தில் ரயில் கட்டணம் இப்படி ஒரேயடியாக உயர்த்தப்பட்டதற்கு அரசியல் கட்சிகளும், பொது மக்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
தேர்தல் பிரச்சாரத்தின்போது நல்ல நாள் வருவதாகக் கூறினார் பிரதமர் நரேந்திர மோடி. ஆனால் தற்போது கெட்ட நாட்கள் அல்லவா வந்துள்ளது என்று மக்கள் விமர்சித்தனர்.












Click it and Unblock the Notifications