மோடியை துண்டு துண்டாக வெட்டுவேன்..காங். வேட்பாளர் திகில் பேச்சு - வழக்குப் பதிவு
டெல்லி: மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை செருப்பாலும், துடைப்பத்தாலும் அடிக்க வேண்டும் என்று தமிழகத்தில் அதிமுக வேட்பாளர் ஒருவர் திமிர்த்தனமாக பேசிய நிலையில் தற்போது உ.பி.யைச் சேர்ந்த காங்கிரஸ் வேட்பாளர் ஒருவர் பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை துண்டு துண்டாக வெட்ட வேண்டும் என்று ஆவேசமாக பேசியுள்ளார்.
இதையடுத்து அவர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
உ.பி. மாநிலம் சஹாரன்பூர் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுபவர் இம்ரான் மசூத். இவர் பேசியதாக ஒரு வீடியோ தற்போது பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

ஒரு கூட்டத்தில் மசூத் பேசுகையில், உ.பி. குஜராத் அல்ல. குஜராத்தில் வெறும் 4 சதவீத முஸ்லீம்கள்தான் வசிக்கின்றனர். ஆனால் உ.பியில் 22 சதவீதம் முஸ்லீம்கள் உள்ளனர்.
எனவே நான் மோடியை எதிர்த்து தீவிரமாக மோதுவேன். அவருக்கு எப்படி பதிலளிக்க வேண்டும் என்று எனக்குத் தெரியும். அவரை துண்டு துண்டாக வெட்டி எறிந்து விடுவேன் என்று அவர் பேசியதாக அந்த வீடியோ காட்சி கூறுகிறது.
மசூத்தின் இந்தப் பேச்சு பரபரப்பைக் கிளப்பியுள்ளது. இதையடுத்து தற்போது தேர்தல் ஆணையம் இதுகுறித்த விவரத்தை மாநில தேர்தல் அதிகாரியிடம் கோரியது. தற்போது அவர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இதற்கிடையே மசூத்தின் பேச்சுக்கு காங்கிரஸ் உள்பட பல்வேறு கட்சிகளும் கண்டனம் தெரிவித்துள்ளன. இதைத் தொடர்ந்து மசூத் தான் பேசியது தவறு என்று மன்னிப்பு கேட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications