பாலியல் புகார் வழக்கில் முன்ஜாமீன் மனு தள்ளுபடி - சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்த சசிகலா புஷ்பா
டெல்லி: அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக என் மீதும், எனது குடும்பத்தினர் மீதும் தமிழக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அந்த வழக்கை சட்டப்படி எதிர்கொள்வேன் என்று கூறியுள்ள சசிகலா புஷ்பா, முன்ஜாமீன் கேட்டு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கட்சித்தலைமை தம்மை அடித்து ராஜினாமா செய்ய வற்புறுத்துவதாக ராஜ்சபாவில் பேசிய சசிகலா புஷ்பா, உடனடியாக அ.தி.மு.கவில் இருந்து நீக்கப்பட்டார். சசிகலா புஷ்பா எம்.பி.யின் வீடு தூத்துக்குடியில் உள்ளது. அவரது வீட்டில் வேலை பார்த்த பெண்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக வந்த புகாரின் பேரில் சசிகலா புஷ்பா, அவரது கணவர், கணவர் லிங்கேஸ்வர திலகம், மகன் பிரதீப்ராஜா, சசிகலாபுஷ்பாவின் தாயார் கவுரி ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தூத்துக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இதைத்தொடர்ந்து சசிகலாபுஷ்பா எம்.பி. உள்பட 4 பேரும் முன்ஜாமீன் கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தனர். அவர்களுக்கு முன்ஜாமீன் வழங்க ஆட்சேபம் தெரிவித்து அவர்கள் மீது புகார் கொடுத்துள்ள இளம்பெண் மனு தாக்கல் செய்தார்.

சசிகலா புஷ்பா
இந்த மனுக்கள் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணைக்கு வந்த போது, ‘முன்ஜாமீன் மனுவுக்கான வக்காலத்தில் சசிகலாபுஷ்பா எம்.பி., மதுரைக்கு வந்து கையெழுத்திட்டுள்ளதாக ஆவணம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆனால் அவர் மதுரைக்கு வரவில்லை. போலியாக இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது' என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து முன்ஜாமீனுக்காக வக்காலத்தில் கையெழுத்திட்ட விவகாரம் தொடர்பாக சசிகலாபுஷ்பா, அவருடைய கணவர் லிங்கேசுவர திலகம் ஆகியோர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.

ஆஜராக உத்தரவு
இந்த உத்தரவை எதிர்த்து சசிகலாபுஷ்பா உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டபடி சசிகலாபுஷ்பா, அவருடைய கணவர் லிங்கேஸ்வர திலகம் ஆகியோர் ஆஜராக வேண்டும் என்றும், அவர்களை 6 வாரத்துக்கு கைது செய்ய தடை விதித்தும் உத்தரவிட்டது.

கையெழுத்து
இதைத்தொடர்ந்து மீண்டும் அந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, சசிகலாபுஷ்பா எம்.பி., தன் கணவருடன் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் நேரில் ஆஜராகினர். அப்போது வக்காலத்தில் கையெழுத்திட்ட விவகாரம் தொடர்பான அரசு தரப்பு குற்றச்சாட்டு குறித்து சசிகலாபுஷ்பா எம்.பி.யிடம் நீதிபதி கேள்வி எழுப்பினார். வக்காலத்தில் உள்ள கையெழுத்து என்னுடையது தான். டெல்லியில் வைத்து வக்காலத்தில் கையெழுத்திட்டேன். அதன்பின்பு என் கணவரிடம் வக்காலத்தை மதுரைக்கு கொடுத்து அனுப்பினேன் என்று சசிகலாபுஷ்பா எம்.பி. தெரிவித்தார். இதை நீதிபதி பதிவு செய்து கொண்டார்.

முன்ஜாமீன் கொடுக்க ஆட்சேபனை
இதன்பின்பு முன்ஜாமீன் மனு மீதான விசாரணை நடைபெற்றது. சசிகலாபுஷ்பா எம்.பி. உள்ளிட்ட 4 பேருக்கும் முன்ஜாமீன் வழங்க அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் அட்வகேட் ஜெனரல் புகழேந்தி, அரசு வக்கீல்கள் கன்னித்தேவன், அன்பரசன் ஆகியோரும், புகார் கொடுத்த இளம்பெண் தரப்பில் ஆஜரான வக்கீல் ஆர்.ஆனந்தும் ஆட்சேபம் தெரிவித்தனர்.

கடும் எதிர்ப்பு
அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் முன்ஜாமீன் மனு மீது நீதிபதி வி.எம்.வேலுமணி தீர்ப்பு அளித்தார். "மனுதாரர்கள் மீதான குற்றச்சாட்டு கடுமையானது. மனுதாரர்கள் மீதான குற்றச்சாட்டை பொறுத்தமட்டில் அவர்களுக்கு தண்டனை கிடைக்க சாத்தியக்கூறுகள் உள்ளன. இதனால் அவர்களுக்கு முன்ஜாமீன் வழங்கினால் அவர்கள் தலைமறைவாகவோ, தப்பித்துச் செல்லவோ வாய்ப்பு உள்ளது.

முன்ஜாமீன் மனு தள்ளுபடி
மனுதாரர்களின் செல்வாக்கு, நடவடிக்கை போன்றவற்றையும் பார்க்க வேண்டியது உள்ளது. மனுதாரர்களுக்கு முன்ஜாமீன் வழங்கினால் சாட்சிகளை கலைத்து விடுவார்கள். புகார்தாரர்களை மிரட்டுவர். விசாரணை பாதிக்கும் என்ற அரசு தரப்பு அச்சம் நியாயமானது தான். மனுதாரர்கள் மீதான குற்றச்சாட்டின் உண்மையை கண்டறிய மனுதாரர்களை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டியது அவசியமாகும். எனவே, சசிகலாபுஷ்பா எம்.பி. உள்பட 4 பேரின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது .

போலி ஆவணங்கள்
இந்த வழக்கில் போலி ஆவணங்கள் தாக்கல் செய்து மோசடி நடந்துள்ளது. ( முன்ஜாமீன் மனுவுக்காக தாக்கல் செய்த வக்காலத்தில் டெல்லியில் வைத்து கையெழுத்திட்டதாக சசிகலாபுஷ்பா நீதிமன்றத்தில் தெரிவித்தார். ஆனால், வக்காலத்தில் மதுரையில் வைத்து கையெழுத்திட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது). இந்த மோசடி நீதிமன்றத்திற்கு வெளியில் நடந்துள்ளது.

வழக்கு பதிவு செய்ய உத்தரவு
இதுகுறித்து விசாரிக்க வேண்டியது உள்ளது. எனவே, இந்த மோசடி சம்பந்தமாக உயர்நீதிமன்ற மதுரைக் கிளை பதிவாளர்(நீதித்துறை) மதுரை கோ.புதூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்க வேண்டும். மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து சட்டப்படி விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த நடவடிக்கையை மேற்கொள்வதற்கு தேவையான ஆவணங்களை பதிவாளர், போலீசாருக்கு அளிக்க வேண்டும் என்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

அரசியல் காழ்ப்புணர்ச்சி
டெல்லியில் இருக்கும் சசிகலா புஷ்பா செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக என் மீதும், எனது குடும்பத்தினர் மீதும் தமிழக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அந்த வழக்கை சட்டப்படி எதிர்கொள்வேன். உயர்நீதிமன்ற கிளையின் தீர்ப்பை எதிர்த்து அப்பீல் செய்வேன். இது தொடர்பாக எனது வக்கீல்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறேன். எனது எம்.பி பதவிக்காலம் இன்னும் 4 ஆண்டுகள் உள்ளது. அதை முழுமையாக வகிப்பேன் என்று கூறினார் சசிகலா புஷ்பா

உச்சநீதிமன்றத்தில் அப்பீல்
சசிகலா புஷ்பா சொன்னது போல பாலியல் புகார் வழக்கில் முன்ஜாமீன் கேட்டு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். அவரது தாயார், கணவர், மகன் ஆகியோரும் மேல்முறையீடு செய்துள்ளனர். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.












Click it and Unblock the Notifications