ராகுல் ஒரு 'பைத்தியம்' - அரசியலில் ஏ.பி.சி.டி. தெரியாது: பா.ஜ.க. எம்.பி. சாக்ஷி மகாராஜ் 'பொளேர்'
அம்ரோலி: காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்திக்கு மனநிலை பாதிக்கப்பட்டுள்ளது; அரசியலில் ஏபிசிடி கூட தெரியாதவர்.. சோளத்துக்கும் கோதுமைக்கும் வித்தியாசம் கூட அவருக்கு தெரியவில்லை என்று சர்ச்சைக்குரிய பாரதிய ஜனதா எம்.பி. சாக்ஷி மகாராஜ் கடுமையாகத் தாக்கியுள்ளார்.
பாரதிய ஜனதா கட்சியின் எம்.பி.யான சாக்ஷி மகாராஜ் தொடர்ந்து சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்து வருகிறார். இந்து பெண்கள் அதிக குழந்தைகளைப் பெற்றெடுக்க வேண்டும்; காந்தி கொலையாளியான கோட்சே தேசபக்தர் போன்ற சர்ச்சைக்குரிய கருத்துகளை கூறி பரபரப்பை ஏற்படுத்தியவர்.
அண்மையில் ராகுல் காந்தி மாட்டுக்கறி சாப்பிட்டுவிட்டு கேதார்நாத் சென்றதால் நேபாளத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது என்று கூறி புது சர்ச்சையைக் கிளப்பினார்.

ராகுல் ஒரு பைத்தியம்
இந்நிலையில் உத்தரப் பிரதேச மாநிலம் எட்டா மாவட்டத்தில் அம்ரோலி ரத்தன்பூர் கிராமத்தில் கூட்டம் ஒன்றில் நேற்று அவர் பேசியதாவது:
ராகுல் காந்தி ஒரு பைத்தியம் என்றுதான் கூறுவேன்... அவருக்கு அரசியலில் ஏபிசிடி தெரியாது. விவசாயிகளைப் பற்றி பேசுகிற ராகுல் காந்திக்கு கோதுமைக்கும் சோளத்துக்கும் வித்தியாசம் தெரியாது.
திரெளபதிக்கு துன்பம் நேர்ந்தபோது உடனடியாக ஓடிவந்து உதவி செய்த கிருஷ்ணனைப் போல அண்டை நாடான நேபாளத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டவுடன் மீட்பு நிவாரணப் பணிகளை பிரதமர் நரேந்திர மோடி முடுக்கி விட்டார்.
உத்தரப் பிரதேச மாநிலத்தில் பருவம் தவறிய மழை, சூறாவளியால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளின் பிரச்னைகளைத் தீர்ப்பதில் அகிலேஷ் யாதவ் தலைமையிலான அரசு அக்கறை காட்டவில்லை. விவசாயிகளுக்காக மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ள கோடிக்கணக்கான ரூபாய், இன்னமும் அவர்களைச் சென்றடையவில்லை.
உத்தரப்பிரதேசத்தில் குண்டர்களின் ஆட்சிதான் நடைபெறுகிறது. இங்கு சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து போய்கிடக்கிறது.
இவ்வாறு சாக்ஷி மகாராஜ் பேசினார்.
காங்கிரஸ் கண்டனம்
ராகுல் காந்தி குறித்த சாக்ஷி மகராஜின் இந்த பேச்சுக்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து டெல்லியில் அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் சிங்வி கூறுகையில், சாக்ஷி மகராஜின் பேச்சில் இருந்து அவர் எந்த அளவுக்கு தரம் தாழ்ந்து நடந்து கொள்வார் என்பது தெரிகிறது. இதுபோன்ற கருத்துகளைக் கேட்டுக் கொண்டு பிரதமர் நரேந்திர மோடி மவுனத்துடன் இருப்பது உண்மையிலேயே வேதனையளிக்கிறது என்றார்.












Click it and Unblock the Notifications