தீப்பெட்டிக்குள் அடங்கும் பட்டுச் சேலையை மிஷல் ஒபாமாவுக்காக நெய்த தெலுங்கானா விஜய்
ஹைதராபாத்: தெலுங்கானாவைச் சேர்ந்த நெசவாளியான நல்லா விஜய் என்பவர் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவின் மனைவிக்கு பரிசளிக்க தீப்பெட்டிக்குள் அடங்கும் பட்டுச்சேலையை நெய்துள்ளார்.

அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா, தனது மனைவி மிஷலுடன் வரும் 24ம் தேதி இந்தியா வருகிறார். இந்த ஆண்டு டெல்லி செங்கோட்டையில் நடக்கும் குடியரசு தின விழாவில் ஒபாமா சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். ஒபாமாவின் வருகையையொட்டி டெல்லியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
தெலுங்கானா மாநிலத்தில் உள்ள சிர்சிலா நகரைச் சேர்ந்தவர் நல்லா விஜய்(27). நெசவாளி. அவர் மிஷலுக்கு தீப்பெட்டிக்குள் அடங்கும் பட்டுச் சேலையையும், ஒபாமாவுக்கும் தீப்பெட்டிக்குள் மடித்து வைக்கும் சால்வையைும் நெய்துள்ளார்.
60 கிராம் எடை கொண்ட அந்த சேலை 4.5 மீட்டர் நீளமானது. சால்வை 30 கிராம் எடை கொண்டது. மேலும் அது 2 மீட்டர் நீளமானது. சேலை மற்றும் சால்வை மத்திய அமைச்சர் பன்டாரு தத்தாத்ரேயாவிடம் ஒப்படைக்கப்பட்டுவிட்டது. அவற்றை அவர் பிரதமர் மோடியிடம் அளித்து ஒபாமாவுக்கும், மிஷலுக்கும் பரிசளிக்குமாறு கேட்டுக் கொள்ள உள்ளார்.
ஒபாமாவின் இந்த இந்திய பயணம் அவருக்கு என்றும் நினைவில் இருக்கும் ஒரு இனிய பயணமாக அமையத் தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது.












Click it and Unblock the Notifications