குறுக்குவழியில் அதிமுக நிரந்தர பொதுச்செயலராக சசி முயற்சி.. தேர்தல் கமிஷனில் மீண்டும் சசிகலா புஷ்பா!
அதிமுக நிரந்தர பொதுச்செயலராக சசிகலாவை 'நியமிப்பதை' ஏற்க கூடாது என தேர்தல் ஆணையத்திடம் சசிகலா புஷ்பா மீண்டும் மனு அளித்துள்ளார்.
டெல்லி: அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலராக குறுக்குவழியில் தம்மை அறிவிக்க சசிகலா முயற்சிப்பதாக தேர்தல் ஆணையத்திடம் சசிகலா புஷ்பா மீண்டும் புகார் தெரிவித்துள்ளார்.
அதிமுகவின் தற்காலிக பொதுச்செயலராக சசிகலா நியமிக்கப்பட்டிருக்கிறார். அதிமுகவின் பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் வாக்களித்துதான் பொதுச்செயலரை தேர்ந்தெடுக்க வேண்டும்.
தற்காலிக பொதுச்செயலர்
ஆனால் தம்மை ஆதரித்து வாக்களிக்கமாட்டார்கள் என்பதை உணர்ந்தவர் சசிகலா. ஆகையால்தான் நியமன பொதுச்செயலராக அதாவது தற்காலிக பொதுச்செயலராக இருந்து வருகிறார் சசிகலா.
எனக்குதான் சிஎம் பதவி
அதேநேரத்தில் நிரந்தர பொதுச்செயலராகவும் முதல்வர் பதவியையும் கைப்பற்ற பகீரத முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார் சசிகலா. ஆனால் நானே முதல்வர் பதவியில் அமருவேன் என அடம்பிடித்து வருகிறார் சசிகலாவின் கணவர் நடராஜன்.
மோடியிடம் ஓபிஎஸ் புகார்
இந்த அக்கப்போர் குறித்து அண்மையில் பிரதமர் மோடியை சந்தித்த முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் விவரித்திருந்தார். இந்த நிலையில் தற்போது நிரந்தர பொதுச்செயலராக தேர்ந்தெடுக்கப்பட்டார் சசிகலா என அறிவிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறதாம்.
தேர்தல் கமிஷனில் சசிகலா புஷ்பா
இதையறிந்த ராஜ்யசபா எம்பி சசிகலா புஷ்பா தேர்தல் ஆணையத்துக்கு சென்றிருக்கிறார். சசிகலா தற்காலிக பொதுச்செயலர்தான்; அவர் நிரந்தரமான பொதுச்செயலர் எனில் பொதுக்குழு உறுப்பினர்கள் ஓட்டுப் போட்டு தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்; ஆகையால் நீங்களே அந்த தேர்தலை நடத்திவிடுங்கள்; அப்படி தேர்தல் நடத்தாமல் தாம் நிரந்தர பொதுச்செயலர் என சசிகலா கடிதம் அனுப்பினால் அதை நிராகரியுங்கள் என கோரிக்கை விடுத்திருக்கிறார் சசிகலா புஷ்பா.
தொடரும் சசிகலா புஷ்பாவின் குடைச்சலால் மன்னார்குடி வகையறா கொந்தளிப்புடன் இருந்து வருகிறதாம்.