வேலைக்கார பெண்ணையும், மகளையும் வீட்டில் அடைத்து வைத்து பலாத்காரம் செய்த சவுதி அரேபியா அதிகாரி!
டெல்லி: நேபாள நாட்டை சேர்ந்த 44 வயது பெண்ணையும் அவரது 20 வயது மகளையும் செக்ஸ் அடிமைகளாக நடத்தி வந்த சவுதி அரேபியா நாட்டை சேர்ந்த அதிகாரி மற்றும் அவரது மனைவி மற்றும் அவரது நண்பர்கள் மீது டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளதோடு மட்டுமின்றி, இந்தியா-சவுதி நாட்டு உறவிலும் ஒரு தாக்கத்தை உருவாக்கியுள்ளது.
சவுதி அரேபியாவின் தூதரகம் இந்திய தலைநகர் டெல்லியிலுள்ளது. இதில் பணியிலுள்ளார் செயலாளர் என்ற மட்டத்திலான ஒரு 'உயர் அதிகாரி'. இந்த அதிகாரியின் வீடு குர்கான் பகுதியிலுள்ளது. இந்த வீட்டில் வேலை செய்வதற்காக என்று, 4 மாதங்கள் முன்பு நேபாளத்தை சேர்ந்த 44 வயது பெண் மற்றும் அவரது 20 வயது மகள் பணியமர்த்தப்பட்டனர்.
ஆனால், சில நாட்களிலேயே அதிகாரியின் குரூர முகம் வெளிச்சத்துக்கு வந்தது. வேலைக்கு வந்த தாயையும், மகளையும், அந்த அதிகாரி செக்ஸ் அடிமைகளாக நடத்தியுள்ளார். சவுதியில் இருந்து டெல்லி வரும் அவரது நண்பர்கள் பலருக்கும் அந்த இரு பெண்களையும் விருந்தாக்கியுள்ளார்.
அதேநேரம், இதையெல்லாம் தெரிந்திருந்தும், சவுதி அதிகாரியின் மனைவியோ, காப்பாற்ற முன்வரவில்லை. மாறாக, கணவரிடம் செக்ஸ் அடிமைகளாக இருக்கும் அந்த பெண்களை பகல் நேரத்தில் பாத்திரம் கழுவ செய்வது, துணி துவைக்க செய்வது போன்ற வேலைக்கு பயன்படுத்தி வந்துள்ளார்.
பகலில் அதிகாரியின் மனைவியிடமும், இரவில் அதிகாரி மற்றும் அவரது நண்பர்களிடமும் அடிமையாக சிக்கி கட்த 4 மாதங்களாக அல்லல்பட்டனர் அவ்விரு பெண்களும். இந்நிலையில் என்.ஜி.ஓ ஒன்றின் தகவல் உதவியுடன், டெல்லி போலீசார் இன்று அந்த அதிகாரி வீட்டில் அதிரடி சோதனை நடத்தியபோது, 2 பெண்களும் மீட்கப்பட்டனர். அந்த பெண்கள் அளித்த புகாரின் பேரில், சவுதி அதிகாரி மற்றும் அவரது மனைவி மற்றும் பலாத்காரம் செய்த நண்பர்கள் மீது புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் கைது நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
சவுதி அரேபியாவுடன், இந்தியாவுக்கு நல்லுறவு உள்ள நிலையில், இரு நாட்டு தூதரக அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தி, ஆதாரங்களை வலுவாக சேகரித்த பிறகு, கைது நடவடிக்கை இருக்கலாம் என்று டெல்லி காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.