இடதுசாரி செயற்பாட்டாளர்கள் ஐவருக்கும் செப்.12 வரை வீட்டுக்காவல் நீட்டிப்பு: சுப்ரீம் கோர்ட்
டெல்லி: கைது செய்யப்பட்டு அவரவர்களின் வீடுகளில் காவலில் வைக்கப்பட்டுள்ள இடதுசாரி செயற்பாட்டாளர்களை 5 பேர் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அவர்கள் வீட்டு காவல் 12ம் தேதி வரை நீடிக்கப்படுவதாக உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
மகாராஷ்டிராவின், பீமா கோரேகான் அஞ்சலி சம்பவத்தையடுத்து தலித்துகள் மற்றும் உயர் ஜாதியினர் நடுவே நடந்த கலவரம் தொடர்பாக புனே போலீசார் இப்போது கைது நடவடிக்கைகள் முடுக்கிவிட்டுள்ளனர்.

தெலுங்கானா, மகாராஷ்டிரா, ஹரியானா, ஜார்கண்ட், டெல்லி, கோவா, சத்தீஷ்கர் என மொத்தம் 7 மாநிலங்களில் ஒரே நேரத்தில் போலீஸ் சோதனை நடத்தப்பட்டது.
இதில், இடதுசாரி சிந்தனையாளரும், எழுத்தாளருமான, வரவர ராவ், மனித உரிமை ஆர்வலரும், வழக்கறிஞருமான சுதா பரத்வாஜ், செயற்பாட்டாளர்கள் அருண் பெரெய்ரா, கவுதம் நவ்லகா மற்றும் வெரூன் கோன்சல்வஸ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். உபா சட்டம் இவர்கள் மீது பாய்ந்துள்ளது.
இந்தக் கைது நடவடிக்கைக்கு எதிராக ரோமிலா தாபர், தேவகி ஜெய்ன், பிரபாத் பட்நாயக், சதீஷ் தேஷ்பாண்டே மற்றும் மஜா தருவலா ஆகிய 5 பேர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, தீபக் மிஸ்ரா தலைமையில், நீதிபதிகள் ஏ.எம்.கன்வில்கர் மற்றும் டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் அடங்கிய மூன்று நீதிபதிகள் அமர்வு முன்னிலையில் ஆகஸ்ட் 29ம் தேதி விசாரணைக்கு வந்தது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், வழக்கை செப்டம்பர் 6ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர். அதுவரை கைது செய்யப்பட்ட ஐவரையும் அவரவர் வீடுகளில் வீட்டுக்காவலில் வைக்க உத்தரவிட்டனர்.
இதனிடையே, நேற்று மகாராஷ்டிரா அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் எதிர்மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் கூறியிருந்ததாவது: கைது செய்யப்பட்டுள்ள இடதுசாரி ஆர்வலர்களுக்கு, இந்தியாவில் தடைசெய்யப்பட்ட இயக்கமான மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் தொடர்பு உள்ளது. சட்டத்திற்குப் புறம்பாக பொதுக் கூட்டங்களை நடத்தி, மக்களிடையே சர்ச்சைக்குரிய கருத்துகளைப் பரப்பியுள்ளனர். முக்கிய நபர்கள் மீது தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருந்ததும் அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட மின்னணு சாதனங்கள் மூலமாகத் தெரிய வந்துள்ளது. மாவோயிஸ்டுகளுடனான தொடர்புகள் பற்றிய ஆதாரங்கள் கிடைத்ததால்தான் ஐவரும் கைது செய்யப்பட்டனரே தவிர, அரசுக்கு எதிராக எதிர்க்கருத்து வைத்திருந்ததற்காகக் கைது செய்யப்படவில்லை. இவ்வாறு கூறப்பட்டிருந்தது.
இன்று வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ஐவரையும் வீட்டு காவலில் வைத்திருப்பது விசாரணையை பாதிக்கிறது என்றும், போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதிக்க வேண்டும் என்றும், மகாராஷ்டிரா அரசு சார்பில் ஆஜரான, கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் துஷ்கர் மேத்தா வாதிட்டார்.
வழக்கு விசாரணையை செப்டம்பர் 12ம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதிகள், அதுவரை கைது செய்த ஐவரையும், வீட்டு காவலிலேயே வைத்திருக்க உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications