ராஜினாமா செய்ய சொல்வதா? சுப்ரீம் கோர்ட்டுக்கு போனார் உத்தரகாண்ட் ஆளுநர்!!
டெல்லி: தம்மை பதவி விலக வேண்டும் என்று உள்துறை செயலர் வலியுறுத்தியதை எதிர்த்து உத்தரகாண்ட் ஆளுநர் அஜீஷ் குர்ஷி தொடர்ந்த வழக்கில் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான அரசு அமைந்த நிலையில் பல மாநில ஆளுநர்களை பதவி விலகுமாறு உள்துறை செயலர் தொலைபேசி மூலம் வலியுறுத்தினார். இது சலசலப்பை ஏற்படுத்தியது.
பல மாநில ஆளுநர்கள் அடுத்தடுத்து ராஜினாமா செய்தனர். ஹெலிகாப்டர் ஊழல் வழக்கில் சிக்கியதால் மேற்கு வங்க ஆளுநராக இருந்த எம்.கே. நாராயணன், கோவா ஆளுநராக இருந்த வான்சூ ஆகியோர் ராஜினாமா செய்தனர்.

பின்னர் குஜராத்தில் இருந்து மிசோரம் மாநில ஆளுநராக மாற்றப்பட்ட கமலாபெனிவால் டிஸ்மிஸ் செய்யப்பட்டார். இந்த நிலையில் மத்திய அரசு வலியுறுத்துவதைப் போல தம்மால் பதவி விலக முடியாது என்று உத்தரகாண்ட் ஆளுநர் அஜீஷ் குர்ஷி கூறிவிட்டார்.
அத்துடன் உச்சநீதிமன்றத்தில் இது தொடர்பாக ஒரு வழக்கையும் தாக்கல் செய்தார் அஜீஷ் குர்ஷி. அதில், ஆளுநர் ஒரு அரசு ஊழியர் அல்ல. அது ஒரு அரசியல் சாசனப்பதவி. ஜனாதிபதி விரும்பும்வரை அப்பதவியில் நீடிக்கலாம். உள்துறை செயலர், ஆளுநருக்கு தொலைபேசியில் அழைத்து ராஜினாமா செய்ய சொல்வது வரம்பு மீறிய செயல் என்று அஜீஷ் குர்ஷி குறிப்பிட்டுள்ளார்.
மேலும் முந்தைய உச்சநீதிமன்ற தீர்ப்புகள் பலவற்றை ஆதாரமாக சுட்டிக்காட்டி 'ஜனாதிபதி விரும்பும் வரை அல்லது 5 ஆண்டுகாலத்துக்கு ஆளுநர் பதவியில் ஒருவர் நீடிக்க முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்த மனு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி லோதா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், மத்திய அரசு பதிலளிக்க நோட்டீஸ் அனுப்புமாறு உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications