கருணை கொலை.. மாநில அரசுகளிடம் கருத்து கேட்கிறது உச்சநீதிமன்றம்!
டெல்லி: கருணை கொலையை சட்டப்பூர்வமாக்குவது தொடர்பாக அனைத்து மாநில அரசுகள் கருத்து தெரிவிக்க உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி வைத்துள்ளது.
உச்சநீதிமன்றத்தில் கருணை கொலையை சட்டப்பூர்வமாக்கக் கோரி காமன் காஸ் என்ற நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை முதலில் 3 நீதிபதிகளைக் கொண்ட பெஞ்ச் விசாரித்தது.
இதில், முரண்பாடான கருத்துகள் நிலவுவதாலும், சட்டம் குறித்த தெளிவு தேவைப்படுவதாலும் அதிக நீதிபதிகளைக் கொண்ட பெஞ்சுக்கு வழக்கை மாற்றுவதாக நீதிபதிகள் கூறினர்.
இதன்படி தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா தலைமையில் 5 நீதிபதிகளைக் கொண்ட அரசியல் சாசன பெஞ்ச் அமைக்கப்பட்டது. அதன் முன்பு நேற்று இம்மனு விசாரணைக்கு வந்தது.
அப்போது, மத்திய அரசு சார்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் முகுல் ரோகத்கி, கருணை கொலையை சட்டபூர்வமாக்க கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
இதற்கு நீதிபதிகள், கருணை கொலையை சட்டபூர்வமாக்காமல் இருப்பதற்கு, அது தவறாக பயன்படுத்தப்படும் என்பதை காரணமாக கூறக்கூடாது. தவறாக பயன்படுத்தப்படுவதை தடுக்க என்ன பாதுகாப்பு அம்சங்களை சேர்க்கலாம் என்று கூறுங்கள் என்று கூறினர்.
மேலும் மனுதாரரைப் பார்த்து, கருணை கொலை பற்றி உலகம் முழுவதும் விவாதம் நடந்து வருகிறது. ஆனால் ஒருமித்த கருத்து ஏற்படவில்லை. மரணத்தை ஏற்படுத்த குறைந்த வேதனை கொண்ட வழி என்ன? என்று கேட்டனர்.
பின்னர் இந்த விவகாரம், அரசியல் சட்டம் மட்டுமின்றி, தார்மீகம், மதம், மருத்துவம் ஆகியவை சம்பந்தப்பட்டது என்பதால், மாநில அரசுகளின் கருத்துகளை கேட்பது அவசியம் என்று நீதிபதிகள் கூறினர்.
எனவே, அனைத்து மாநில, யூனியன் பிரதேச அரசுகளும் இந்ஹ்ட விவகாரத்தில் கருத்து தெரிவிக்க வேண்டும் என்று நோட்டீசு அனுப்பவும் உத்தரவிட்டனர். இந்த வழக்கில் நீதிமன்றத்துக்கு உதவுவதற்காக, முன்னாள் சொலிசிட்டர் ஜெனரல் டி.ஆர்.அந்திஅர்ஜுனாவை ஆலோசகராக அரசியல் சாசன பெஞ்ச் நியமித்தது.