கூடங்குளம் அணுமின் நிலைய பாதுகாப்பு: சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்!
டெல்லி: பாதுகாப்பு விதிமுறைகளைக் கடைப்பிடிக்காமல் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் மின் உற்பத்தி தொடங்கியதற்கு மத்திய மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
கூடங்குளத்தில் அணு உலைகள் இயங்க அனுமதிக்கக்கூடாது என்ற கோரிக்கையை வலியுறுத்தி பூவுலகின் நண்பர்கள் என்ற தன்னார்வ அமைப்பைச் சேர்ந்த பொறியாளர் சுந்தரராஜன் சென்னை உயர்நீதிமன்றத்தில் இரண்டு மனுக்கள் தாக்கல் செய்தார்.
முதல் மனுவில், உச்சநீதிமன்றத்தின் நிபந்தனைகள் நிறைவேற்றப்படாத நிலையில் கூடங்குளத்தில் மின்சார உற்பத்தியை தொடங்க இந்திய அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையம் அனுமதித்தது தவறு என்றும் 2-வது மனுவில், சுப்ரீம் கோர்ட்டு விதித்த 15 நிபந்தனைகளையும் நிறைவேற்றாத கூடங்குளம் அணு உலை நிர்வாகம், மின்சார உற்பத்திக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி இருந்தார்.
இதை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றத்தில் 29.7.2013 அன்று 2 மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. அணு உலையை திறக்க அணுசக்தி ஒழுங்கு முறை ஆணையம் உத்தரவிட்டது சரியே என்றும் நீதிபதிகள் தீர்ப்பு அளித்தனர்.
உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதல்கள் பின்பற்றப்படவில்லை என்று மனுதாரர் கருதினால் அவர் இதுகுறித்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரலாம் என்றும் உத்தரவில் கூறினர்.
இதைத் தொடர்ந்து மனுதாரர் சுந்தரராஜன் உச்சநீதிமன்றத்தின் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்தார். அவருடைய மனுவில், ‘கூடங்குளம் அணு உலை திறப்பது குறித்து ஏற்கனவே உச்சநீதிமன்றம் பரிந்துரைத்த 15 விதிமுறைகளில் பெரும்பாலானவற்றை கடைப்பிடிக்காமலும், சுற்றுச்சூழலுக்கு ஊறு நேராத வகையில் அமைக்கப்பட்டுள்ளதாக தொடர்புடைய நிறுவனங்களிடம் இருந்து தேவையான சான்றுகளை பெறாதது,
மேற்பார்வை மற்றும் கண்காணிப்புக்களை மேற்கொள்ளாதது, அணுக்கழிவுகளை பாதுகாப்பான முறையில் வெளியேற்றாதது, அணுக்கழிவு கலந்த நீரை சரியான வழிமுறைகளுடன் வெளியேற்றுதல், அணு உலைக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபட்டவர்கள் மீது பதிவான வழக்குகளை வாபஸ் பெறுதல்' ஆகிய கோரிக்கைகளை மனுவில் வலியுறுத்தினார்.
இந்த மனு, உச்சநீதிமன்ற நீதிபதிகள் கே.எஸ்.ராதாகிருஷ்ணன், ஏ.கே.சிக்ரி ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல் பிரசாந்த்பூஷன் ஆஜரானார்.
மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் இது தொடர்பாக பதிலளிக்க மத்திய-மாநில அரசுகள், அணுசக்தி கட்டுப்பாட்டு வாரியம், இந்திய அணுசக்தி வாரியம், தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ஆகிவற்றுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications