அயோத்தியில் ராமர் கோவில் கட்ட ஆதரவு... ம.பி. ஆளுநரை நீக்கக் கோரும் மனு டிஸ்மிஸ்!
டெல்லி: அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வலியுறுத்தி பேசிவரும் மத்திய பிரதேச ஆளுநர் ராம்நாயக்கை நீக்கக் கோரி தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.
மத்தியபிரதேச மாநிலத்தில் மருத்துவ கல்லூரி மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு, அரசு பணிகளுக்கான தேர்வுகள் ஆகியவற்றில் நடந்த ஊழல் தொடர்பாக சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணை நடத்தி வந்தது. இதில் அரசியல் தலைவர்கள், உயர் அதிகாரிகள், தொழில் அதிபர்கள் என பல்வேறு தரப்பினருக்கும் தொடர்பு இருப்பது விசாரணையில் தெரியவந்தது.
வியாபம் எனப்படும் இந்த முறைகேட்டில் தொடர்புடைய 48 பேர் அடுத்தடுத்து மர்மமான முறையில் மரணமடைந்துள்ளனர். இதில் மத்திய பிரதேச ஆளுநர் ராம்நாயக்கின் மகனும் ஒருவர். அத்துடன் ஆளுநர் ராம்நாயக்குக்கும் இந்த ஊழலில் தொடர்புள்ளதாக கூறப்பட்டது. தற்போது இந்த வழக்கை உச்சநீதிமன்றம் சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றியுள்ளது.
இதனிடையே அயோத்தி ராமர் கோவில் கட்டுவதற்கு ஆதரவாக ராம்நாயக் பேசிவருவதால் அவரை மாற்றக் கோரி மத்திய பிரதேச மாநில உயர்நீதிமன்றத்தில் "ஜனநாயகத்திற்கான குடிமக்கள்" என்ற என்.ஜி.ஓ. சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இதனை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி ஹெச்.எல்.தத்து தலைமையிலான பெஞ்ச், ஆளுநர் பதவி நீடிப்பு குறித்து ஆராயும் அதிகாரம் உச்ச நீதிமன்றத்துக்கு இல்லை என்று கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.