நீதிமன்ற அவமதிப்பு வழக்கு... கொல்கத்தா நீதிபதி கர்ணனுக்கு 6 மாத சிறை... உச்சநீதிமன்றம் அதிரடி!
நீதிமன்றத்தை அவமதித்ததாக கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணனுக்கு 6 மாத சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது உச்சநீதீமன்றம்.
டெல்லி: நீதிமன்றத்தை அவமதித்ததாக கொல்கத்தா நீதிபதி கர்ணனுக்கு 6 மாத சிறை தண்டனை விதித்து உச்சநீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தைச் சேர்ந்த சி.எஸ். கர்ணன் கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதியாக உள்ளார். இவர், சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக இருந்த சஞ்சய் கிஷன் கவுல் உள்ளிட்ட பல நீதிபதிகள் மீது ஊழல் புகார் கூறியதைத் தொடர்ந்து, உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வந்தது.
நீதிபதிகளுக்கு எதிராக ஊழல் புகார் கூறியதற்காக உச்சநீதிமன்றத்தால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கிற்குள்ளாகிய நீதிபதி கர்ணனுக்கு மனநல பரிசோதனை செய்ய சுப்ரீம் கோர்ட் சமீபத்தில் உத்தரவிட்டது. இதற்கு நீதிபதி கடும் கண்டனம் தெரிவித்தார்.
மனநல பரிசோதனை
இதற்கு பதிலடி நடவடிக்கையாக அவர் ஒரு உத்தரவை பிறப்பித்தார். அதில், சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் 8 பேருக்குத்தான் மன நலப் பரிசோதனை செய்ய வேண்டும். எய்ம்ஸ் மன நல மருத்துவர்கள் கொண்ட குழு இந்த சோதனை நடத்த வேண்டும் என அந்த உத்தரவில் குறிப்பிட்டிருந்தார்.
5 ஆண்டு சிறை
இந்நிலையில் தலித் சமுதாயத்தைச் சேர்ந்த தம்மை உச்ச நீதிமன்றம் துன்புறுத்தியதாக வன்கொடுமை சட்டத்தின்கீழ் வழக்கு தொடுத்து அதை கர்ணனே விசாரித்து சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி உள்பட 8 நீதிபதிகளுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நேற்று தீர்ப்பளித்தார்.
கர்ணனுக்கு சிறை
இதனால் அதிர்ச்சி அடைந்த உச்ச நீதிமன்றம், நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதி கர்ணனுக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. மேலும் நீதிபதி என்பதால் சிறை தண்டனையில் இருந்து தப்பிக்க முடியாது என்றும் தெரிவித்தது.
ஊடகங்களுக்கு தடை
மேலும் கர்ணனின் அறிக்கைகளை ஊடகங்கள் வெளியிடக் கூடாது எனவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவர் சிறை தண்டனை பெறுவது இதுவே முதல்முறையாகும்.