ஜெ. வழக்கு: பவானிசிங்கை நீக்கக் கோரும் அன்பழகன் மனுவை விசாரிக்கும் 3 நீதிபதிகள் பெஞ்ச் அறிவிப்பு
டெல்லி: ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு விசாரணையில் அரசு வழக்கறிஞராக ஆஜராகும் பவானிசிங்கை நீக்க கோரி தி.மு.க. பொதுச்செயலர் அன்பழகன் தாக்கல் செய்த மனுவை விசாரிக்கும் 3 நீதிபதிகள் பெஞ்ச் அறிவிக்கப்பட்டுள்ளது. நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ஆர்.கே. அகர்வால், பிரபுல் சி. பந்த் ஆகியோர் அன்பழகன் மனுவை விசாரிப்பர். இந்த விசாரணை ஏப்ரல் 21-ந் தேதி முதல் நடைபெற உள்ளது.
வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக தொடரப்பட்ட வழக்கில் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு 4 ஆண்டு சிறைத் தண்டனை விதித்தது பெங்களூரு சிறப்பு நீதிமன்றம். மேலும் ஜெயலலிதாவுக்கு ரூ100 கோடியும் சசிகலா உட்பட 3 பேருக்கு தலா ரூ10 கோடியும் அபராதம் விதிக்கப்பட்டது.

இந்த தண்டனையை எதிர்த்து கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் ஜெயலலிதா உள்ளிட்டோர் மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தனர். இந்த மேல்முறையீட்டு மனு விசாரணையில் அரசு வழக்கறிஞராக பவானிசிங் ஆஜரானார். இம் மனு மீதான விசாரணை முடிவடைந்து தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் கர்நாடகா உயர்நீதிமன்ற தனி பெஞ்ச் நீதிபதி குமாரசாமி ஒத்தி வைத்துள்ளார்.
இதனிடையே இந்த மேல்முறையீட்டு விசாரணையில் அரசு வழக்கறிஞராக பவானிசிங் ஆஜராக கூடாது; அவரை கர்நாடகா அரசு நியமிக்கவில்லை; அவர் குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்படுகிறார்..இதனால் அவரை நீக்க வேண்டும் என்று தி.மு.க. பொதுச்செயலர் அன்பழகன் கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். ஆனால் அவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து அன்பழகன் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இம்மனுவை விசாரித்த நீதிபதிகள் லோகூர், பானுமதி ஆகியோர் இருவேறு தீர்ப்பளித்தனர். "அரசு வழக்கறிஞராக பவானிசிங் ஆஜரானது சட்டவிரோதம்; அவர் குற்றவாளிகளுடன் இணைந்து நீதிபரிபாலனத்தை வளைக்க முயற்சித்தார்.. இந்த மேல்முறையீட்டு விசாரணையே முறையாக நடைபெறவில்லை" என்று நீதிபதி லோகூர் தீர்ப்பளித்தார்.
ஆனால் நீதிபதி பானுமதியோ, ஒரு வழக்கின் இன்சார்ஜ் ஆக வழக்கறிஞர் நியமிக்கப்பட்டால் அது மேல்முறையீட்டுக்கும் பொருந்தும்.. அதனால் அரசு வழக்கறிஞராக பவானிசிங் ஆஜரானதில் தவறில்லை என்று தீர்ப்பளித்தார். இருவேறு தீர்ப்புகள் அளிக்கப்பட்டதால் இரண்டு நீதிபதிகளும் இணைந்து இந்த வழக்கை 3 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச்சுக்கு பரிந்துரைத்தனர். இதனைத் தொடர்ந்து 3 நீதிபதிகள் பெஞ்ச் வரும் 21-ந் தேதியன்று விசாரணை நடத்தும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்தது.
இந்நிலையில் 3 நீதிபதிகள் பெஞ்ச் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ஆர்.கே. அகர்வால், பிரபுல் சி. பந்த் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் அன்பழகன் மனுவை வரும் 21-ந் தேதியன்று விசாரிக்க உள்ளது.
ஜெயலலிதாவின் மேல்முறையீட்டு வழக்கைப் பொறுத்தவரையில் இந்த 3 நீதிபதிகள் பெஞ்ச் அளிக்கும் தீர்ப்புதான் தற்போதைய நிலையில் மிகவும் முக்கியமானது. 3 நீதிபதிகள் பெஞ்ச் விசாரணையில், பவானிசிங் ஆஜரானதில் தவறு இல்லை என நீதிபதி பானுமதி தீர்ப்பளித்தது ஏற்கப்பட்டால் மே 12-ந் தேதிக்கு முன்னரே மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பை நீதிபதி குமாரசாமி அளிக்கக் கூடும்.
நீதிபதி லோகூரின் தீர்ப்பை ஏற்று, பவானிசிங் ஆஜரானது சட்டவிரோதம்; மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை மீண்டும் நடத்தப்பட வேண்டும் என்று தீர்ப்பளிக்கப்பட்டால் புதிய அரசு வழக்கறிஞர் நியமிக்கப்பட்டு.. மீண்டும் விசாரணை நடத்தி மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பளிக்க மேலும் 3 அல்லது 4 மாதங்களாகும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications