குற்றவாளிகளுடன் தொடர்பு: வழக்கை தள்ளுபடி செய்ய கோரிய சிபிஐ இயக்குநர் கோரிக்கை நிராகரிப்பு-கோர்ட்!
டெல்லி: ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கின் குற்றவாளிகளை சந்தித்த சிபிஐ இயக்குநர் ரஞ்சித் சின்காவை நீக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்ய உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.
ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கின் குற்றவாளிகளை தமது வீட்டில் சிபிஐ இயக்குநர் ரஞ்சித் சின்கா சந்தித்தார் என்று என்.ஜி.ஓ நிறுவனம் ஒன்று பொதுநலன் வழக்குத் தாக்கல் செய்தது. இந்த அமைப்புக்காக மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் ஆஜராகி வாதாடி வருகிறார்.
இந்த வழக்கின் விசாரணையின் போது தமது குற்றச்சாட்டுகளுக்கு ஆதரமாக ரஞ்சித் சின்கா வீட்டு வருகைப் பதிவேட்டையும் அவர் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். ஆனால் தம் மீதான வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்; வருகைப் பதிவேட்டில் 90% போலியான பதிவுகள் என்று சின்காவும் ஒரு மனுவைத் தாக்கல் செய்தார்.

இதனை விசாரித்த உச்சநீதிமன்றம், சின்கா வீட்டு வருகைப் பதிவேட்டை கொடுத்த நபரை தெரிவிக்க வேண்டும் என்று பிரசாந்த் பூஷனுக்கு உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் இன்று இந்த வழக்கின் விசாரணை நடைபெற்றது.
அப்போது, சிபிஐ இயக்குநர் இல்ல வருகைப் பதிவேட்டை அளித்தவர் பெயரை வெளியிட இயலாததற்கு மன்னிப்பு கோரியது வழக்கு தொடர்ந்த என்.ஜி.ஓ. அமைப்பு. இதனை ஏற்றுக் கொண்ட உச்சநீதிமன்றம், சிபிஐ இயக்குநர் இல்ல வருகைப் பதிவேடு விவகாரத்தில் அரசு சிறப்பு வழக்கறிஞர் கருத்தை கேட்க முடிவு செய்துள்ளது.
மேலும் வருகைப் பதிவேட்டை கொடுத்தவர் விவரத்தை வெளியிட வேண்டும் என்ற உத்தரவை மறுபரிசீலனை செய்ய உச்சநீதிமன்றம் ஒப்புக் கொண்டது, அதே நேரத்தில் தம் மீதான வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற ரஞ்சின் சின்காவின் கோரிக்கையை நிராகரிப்பதாகவும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. இது ரஞ்சித் சின்காவுக்கு பெரும் பின்னடைவாகும்.












Click it and Unblock the Notifications