இந்திய ராணுவத்தின் வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய ‘ஏப்ரல் 24’
டெல்லி: ஏப்ரல் 24ம் தேதி.. இந்திய ராணுவத்தின் புகழ் மிக்க வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய நாளாகும் இந்த நாள்.
இந்திய ராணுவத்தின் மிகவும் பழமையான 3வது கூர்க்கா படைப் பிரிவு தனது 200வது ஆண்டு தினத்தை 24ம் தேதி கொண்டாடவுள்ளது. 1815ம் ஆண்டு ஏப்ரல் 25ம் தேதி 1/3 கோர்க்கா ரைபிள்ஸ் என்று அழைக்கப்படும் கூர்க்கா படைப் பிரிவு உருவாக்கப்பட்டது.
உத்தராஞ்சலில் உதித்த கூர்க்கா ரைபிள்ஸ்
தற்போது உத்தராஞ்சல் என்று அழைக்கப்படும் அன்றைய அல்மோராவில் சர் ராபர்ட் கோல்கூன் இந்த படைப் பிரிவை தொடங்கி வைத்தார். இந்தப் பிரிவி் கூர்க்காக்கள் மட்டும்லாமல் குமான், கார்வால் பிராந்தியத்தைச் சேர்ந்த பிற சமூகத்தினரும் கூட இடம் பெற்றிருந்தனர்.
மூத்த படைகள் சில
இந்த படைப் பிரிவுக்கு முந்தைய படைப் பிரிவுகளாக மெட்ராஸ் ரெஜிமென்ட் (1758), பஞ்சாப் ரெஜிமென்ட் (1761)., ராஜ்புத்னா ரைபிள்ஸ் (1775), ராஜ்புத் ரெஜிமென்ட் (1778), ஜாட் ரெஜிமென்ட் (1795), குமான் ரெஜிமென்ட் (1813) ஆகியவை உருவாக்கப்பட்டன. இவைதான் இந்திய ராணுவத்தின் நேட்டிவ் படைப் பிரிவுகள் என்று அழைக்கப்படும் மிகப் பழமையான பிரிவுகளாகும்.
நேபாள போரில் கலக்கிய கூர்க்காக்கள்
1814-1816 ஆகிய ஆண்டுகளில் ஆங்கிலேயர்களுக்கும், நேபாளத்திற்கும் இடையே போர் வெடித்தது. அப்போது இந்த கூர்க்கா ரெஜிமென்ட் மிகச் சிறப்பாக பணியாற்றி ஆங்கிலேயர்களுக்கு வெற்றி தேடிக் கொடுத்தது.
ஆரம்பத்தில் போலீஸ்
ஆரம்பத்தில் கூர்க்கா இனத்தவரை சாதாரண போலீஸ் போலத்தான் ஆங்கிலேயர்கள் நடத்தி வந்தனர் பின்னர்தான் அவர்களை ராணுவத்தில் இணைத்து படைப் பிரிவையும் உருவாக்கினர்.
கர்னல் டுன்
1880ம் ஆண்டு ஏப்ரல் 19ம் தேதி நடந்த 2வது ஆப்கன் போரின்போதும் கூர்க்கா படைப் பிரிவு சிறப்பாக செயல்பட்டது. இந்தப் பிரிவின் முதல் இந்திய கமாண்டிங் அதிகாரியாக இருந்தவர் லெப்டினென்ட் கர்னல் பி.ஓ. டுன் ஆவார்.
கால்பந்தில் பிரமாதம்
கூர்க்கா பிரிவைச் சேர்ந்த வீரர்கள் சிறந்த கால்பந்து ஆடும் திறன் பெற்றிருந்தவர்கள். எனவே இவர்கள் நாட்டின் முன்னணி கால்பந்து அணிகளான கல்கத்தா, மோகன்பகான், ஈஸ்ட் பெங்கால் அணிகளில் இடம்பெற்று அவற்றிற்கும் பெருமை தேடித் தந்தனர்.
மக்கள் பணி.. அமைதிப் பணி
பல்வேறு பணிகளிலும், போர்களிலும் கலந்து கொண்ட பெருமை கொண்ட கூர்க்கா படைப் பிரிவு, காஷ்மீர் பள்ளத்தாக்கிலும் சிறப்பாக பணியாற்றியுள்ளது. அதேபோல ருவாண்டாவுக்கு அனுப்பப்பட்ட ஐ.நா. அமைதிப் படையிலும் இடம் பெற்று நமது நாட்டுக்கு நல்ல பெயர் தேடித் தந்துள்ளது.
பூஜ் நிலநடுக்கத்தின்போது
2001ம் ஆண்டு பூஜ் நிலநடுக்கத்தின்போது மிகச் சிறந்த முறையில் மீட்புப் பணியில் ஈடுபட்டனர் இந்தப் படைப் பிரிவைச் சேர்ந்த வீரர்கள்.
குவித்த விருதுகள்
200க்கும் மேற்பட்ட வீர விருதுகளைக் குவித்துள்ள படைப் பிரிவு இது. சுதந்திரத்திற்குப் பின்னர் 177 விருதுகளைப் பெற்றுள்ளது. அசோகா, கீர்த்தி சக்ரா விருதுகளும் இதில் இடக்கம்.