ஜெ. மேல்முறையீட்டு மனு மீது விசாரணை: கர்நாடக ஹைகோர்ட் வளாகத்தில் பலத்த பாதுகாப்பு!
பெங்களூரு : சொத்துக் குவிப்பு வழக்கில் விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உட்பட நான்கு பேர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை நடைபெறுவதால் கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவித்த வழக்கில் அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக முன்னாள் முதல்வருமான ஜெயலலிதா உள்பட நான்கு பேருக்கு 4 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இந்த தண்டனையை எதிர்த்து ஜெயலலிதா உட்பட நான்கு பேரும் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளனர்.

இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்ட போதும், ஜாமீன் தொடர்பான வாதங்கள் நடைபெற்ற போதும் வழக்கமாக நீதிமன்ற வளாகத்தில் அதிமுகவினரின் ஆதிக்கம் அதிகமாக இருந்தது. அதேபோல், ஜெயலலிதா சிறையில் அடைக்கப் பட்டிருந்த போதும் சிறைக்கு வெளியே எப்போதும் அதிமுகவினரின் கூட்டம் காணப்பட்டது.
எனவே, நீதிமன்ற வளாகத்தைச் சுற்றி 144 தடை உத்தரவு போடும் சூழல் நிலவியது. தினமும் விசாரணை இந்நிலையில், ஜெயலலிதா உட்பட நான்கு பேரின் மேல்முறையீட்டு மனு மீது கர்நாடகா உயர்நீதிமன்றத்தின் தனி பெஞ்ச் முன்பு விசாரணை நடைபெறுகிறது.
தனி பெஞ்ச் நீதிபதியாக நியமிக்கப்பட்ட சி.ஆர்.குமாரசாமி விடுப்பில் இருப்பதால் நீதிபதி பில்லியப்பா இன்று இந்த மனுவை விசாரித்து வரும் 5-ந் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரிக்க தனி பெஞ்ச் ஏற்படுத்த வேண்டும், அந்த பெஞ்ச் தினமும் விசாரணை நடத்தி 3 மாதங்களில் வழக்கை முடித்து தீர்ப்பு வழங்க வேண்டும் என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. எனவே, தனி பெஞ்ச் மூலம் இந்த விசாரணை தினமும் நடைபெற உள்ளது.
சி.ஆர்.குமாரசாமி
இந்த தனி பெஞ்ச் நீதிபதியாக நியமிக்கப் பட்டுள்ள சி.ஆர்.குமாரசாமியின் முழு பெயர் சிக்க ராசப்பா குமாரசாமி. கர்நாடக மாநிலம், பெல்லாரி மாவட்டத்தில் 1953 ஆகஸ்ட் 25ம் தேதி பிறந்தவர். '
இளங்கலை பட்டம் முடித்தபின், பெல்லாரி சட்டக் கல்லூரியில் சட்ட படிப்பை முடித்தார். அதை தொடர்ந்து 1983 மார்ச் 11ம் தேதி பார் கவுன்சில் பதிவு செய்தபின் தொழிலாளர், சிவில், கிரிமினல் வழக்குகளை எடுத்து நடத்தினார்.
கடந்த 1995ம் ஆண்டு மாவட்ட சிவில் நீதிபதியாக தேர்வு செய்யப்பட்டார். பெல்லாரி, கொப்பள், ஹாவேரி மாவட்ட செசன்ஸ் நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றியபின், 2005 மார்ச் 7ம் தேதி கர்நாடக உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதியாகவும், 2007 மார்ச் 1ம் தேதி முதல் தற்போது வரை நிரந்தர நீதிபதியாக பணியாற்றி வருகிறார்.
கர்நாடக உயர் நீதிமன்றத்தில் உள்ள மூத்த நீதிபதிகளில் ஒருவரான குமாரசாமி வருகிற ஆகஸ்ட் 25ந் தேதி ஓய்வு பெறுகிறார்.












Click it and Unblock the Notifications