கேரள வங்கி அதிகாரி வீட்டில் மாவோயிஸ்டுகள் தாக்குதல்... காருக்கும் தீ வைப்பு - போலீசார் விசாரணை
பாலக்காடு: கேரள மாநிலம் வயநாடு கல்முக்கு பகுதியில் வசிக்கும் வங்கி மேலாளர் பாஸ்கரன் என்பவரது வீட்டில் மாவோயிஸ்டுகள் தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கேரள மாநிலத்திலுள்ள வயநாடு, பாலக்காடு மாவட்ட வனப்பகுதிகளில் பதுங்கி உள்ள மாவோயிஸ்டுகள் அவ்வப்போது வனத்துறை அலுவலகம்,காவல் நிலையங்களில் மற்றும் வனப் பகுதிக்குள் செல்லும் வனத்துறையினர் மீது தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன் அட்டப்பாடி வனப்பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்த போலீசார் மீது நக்சலைட்டுக்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.அதன் பின் சில நாட்கள் கழித்து போலீஸ் சோதனை சாவடிக்கு தீ வைத்து எரித்தனர். வனத்துறை அதிகாரிகளை கடத்திச் சென்று மிரட்டி அனுப்பினர். இந்த சம்பவங்களுக்கு பிறகு பாலக்காடு, வயநாடு வனப்பகுதிகளில் நக்சலைட்டுக்களை பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.
வங்கி அதிகாரி...
இந்தநிலையில் நேற்று முன்தினம் வயநாடு கல்முக்கு பகுதியில் வசிக்கும் வங்கி மேலாளர் பாஸ்கரன் என்பவரது வீட்டிற்குள் புகுந்து மாவோயிஸ்டுகள் தாக்குதல் நடத்தினர். அப்போது அவரது காருக்கும் தீ வைக்கப்பட்டது.
வங்கிக் கடன்...
மாவோயிஸ்டுகளுக்கு ஆதரவான கோஷங்கள் முழங்கிய அவர்கள் அங்கு ஏராளமான துண்டு பிரசுரங்களை வீசிச் சென்றனர். அதில், பழங்குடியின மக்களுக்கு முறையான வங்கிக் கடன் வழங்க வேண்டும் என அச்சிடப்பட்டு இருந்ததாகக் கூறப்படுகிறது.இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
விசாரணை...
இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இதில் சிலர் மோட்டார் சைக்கிள்களில் வந்து பாஸ்கரன் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து அங்கு நிறுத்தப்பட்டிருந்த கார் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்தது தெரியவந்தது.
தடயங்கள்...
மாவோயிஸ்டுகள் கொண்டு வந்த பெட்ரோல் கேன் மற்றும் சாக்கு ஆகிய தடயங்கள் அங்கு கிடந்தது. அவற்றை போலீசார் கைப்பற்றினர். அதிகாலை நேரத்தில் ஆட்கள் நடமாட்டம் இல்லாததால் மாவோயிஸ்டுகள் எளிதில் ஊருக்குள் புகுந்து தாக்குதல் நடத்திச் சென்றுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
மோப்பநாய்...
வங்கி அதிகாரி வீட்டுக்கு மோப்ப நாய் கொண்டுவரப்பட்டது.அந்த மோப்பநாய் கொஞ்சதூரம் ஓடியபின் மீண்டும் வங்கி அதிகாரி வீடு நோக்கி திரும்பியது.
ரோந்துப் பணி...
தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து வயநாடு மட்டுமின்றி தமிழக கேரளா எல்லைப் பகுதிகளில் மாவோயிஸ்டு தேடுதல் வேட்டையில் போலீசார் தீவிரமாக ஈடுப்படுத்தப் பட்டுள்ளனர். இங்குள்ள கிராம பகுதிகளில் ஆயுதம் தாங்கிய போலீசார் ரோந்து பணியில் ஈடுப்படுத்தப் பட்டு வருகின்றனர்.