கோமியத்தைக் குடிச்சா நல்ல ஆரோக்கியம் கிடைக்கும்.. வயசாகாது.. சொல்வது ராஜஸ்தான் நீதிபதி!
ஜெய்ப்பூர்: முழுக்க முழுக்க ஒரு மத அடிப்பையிலான கருத்துக்களைக் கூறி மாட்டுக்கறி வழக்கில் தீர்ப்பளித்து விட்டு பதவியிலிருந்து ஓய்வு பெற்றுச் சென்றுள்ளார் ராஜஸ்தான் உயர்நீதிமன்ற நீதிபதி மகேஷ் சந்திர சர்மா.
அவரது தீர்ப்பைப் பார்த்தால் ஆச்சரியமும், அதிர்ச்சியும், அயர்ச்சியும்தான் வருகிறது. ஒரு குறிப்பிட்ட மதத்திற்கு ஆதரவான கருத்துக்களே அவரது தீர்ப்பில் நிரம்பிக் காணப்படுகிறது.
இந்த நீதிபதிதான் பசுக்களை இந்தியாவின் தேசிய விலங்காக அறிவிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு யோசனை கூறியவர். இன்றுதான் இவரது பதவிக்காலத்தின் கடைசி நாள். கடைசி நாளில், தனது உத்தரவில் கோமாதாவை வணங்கி விட்டு கிளம்பிப் போயுள்ளார் நீதிபதி சர்மா.

ராஜஸ்தான் நீதிபதி
ராஜஸ்தானில் கன்று, பசு, காளை ஆகிய கால்நடைகளை வெட்டுவதற்கும் கறியை விற்பனைக்காக எடுத்துச் செல்வதற்கும் ஏற்கனவே தடையுள்ளது. இந்த நிலையில் பசுவை தேசிய விலங்காக அறிவிக்கலாம் என்று மத்திய அரசு மற்றும் ராஜஸ்தான் அரசுக்கு நீதிபதி மகேஷ் சந்திர சர்மா தலைமையிலான பெஞ்ச் யோசனை கூறியுள்ளது.

மத ரீதியான கருத்துக்கள்
அதை விட முக்கியமாக தனது உத்தரவில் நீதிபதி சர்மா பல காரணங்களை அடுக்கியுள்ளார். இவை அனைத்துமே முழுக்க முழுக்க மத ரீதியிலானவை என்பதுதான் ஆச்சரியம் தருகிறது. நீதிபதி என்பவர் அனைத்து மதங்களுக்கும் பொதுவானவராக இருக்க வேண்டும். ஆனால் நீதிபதி சர்மா முழுக்க முழுக்க ஒரு மத சார்புடன் உத்தரவை பிறப்பித்துள்ளார்.

11 விஷயங்கள்
நீதிபதி சர்மா தனது உத்தரவில் மொத்தம் 11 விஷயங்களை சுட்டிக் காட்டியுள்ளார். அனைத்துமே மத ரீதியிலான கருத்துக்கள். தனது மனசாட்சிப்படியும், வேதங்களில் சொல்லியுள்ளபடியும் தனது ஆலோசனைகளை முன்வைப்பதாகவும் நீதிபதி சர்மா கூறியுள்ளார். அவை குறித்த ஒரு பார்வை:

ஒரு பசுவுக்குள் 33 கோடி கடவுள்கள்!
ஒரு பசுவின் உடலில் மொத்தம் 33 கோடி கடவுள்களும், தேவதைகளும் வசிப்பதாக நம்பப்படுகிறது. இந்து மத புராணங்களில் கூறியுள்ளது என்னவென்றால் கடவுள் லட்சுமி தோன்றியபோது உடன் தோன்றியது பசு என்று கூறப்படுகிறது.

ஆக்சிஜனை எடுத்துக் கொண்டு
பசு மட்டும்தான் ஆக்சிஜனை எடுத்துக் கொண்டு ஆக்சிஜனை வெளி விடும் ஒரே விலங்கு ஆகும். அது ஒரு மருத்துவமனை போல.

லிவருக்கு நல்லது
பசு மூத்திரம் அதாவது கோமியம் நமது கல்லீரல், இதயம், மன ஆரோக்கியத்தைக் காக்கிறது. நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது. வயதாவதை குறைக்கிறது.

பாவத்தைக் கழுவுகிறது
பசு மூத்திரத்தைக் குடித்தால் நாம் போன பிறவியில் செய்த பாவம் எல்லாம் கழுவித் துடைக்கப்பட்டு விடுகிறது. சுவர்களில் கோமியத்தைத் தெளிப்பதன் மூலம் அது கதிர்வீச்சைத் தடுப்பதாக ரஷ்ய விஞ்ஞானி ஒருவரே கூறியுள்ளார்.

காஸ்மிக் கதிர்கள்
பசுவின் கொம்புகளுக்கும் சக்தி உண்டு. அது காஸ்மிக் கதிர் வீச்சைத் தடுக்கிறது. நம்மைக் காக்கிறது. உலகைக் காக்கிறது. பசுவின் பாலானது நமது உடலில் புற்று நோய் ஏற்படுவதைத் தடுக்கிறது.

காலராவைத் தடுக்கும்
பசுவின் சாணமானது காலராவைத் தடுக்கும் வல்லமை படைத்தது. ஒரு பசுவின் சாணத்தின் மூலம் வருடத்திற்கு 4500 லிட்டர் பயோ கேஸ் தயாரிக்க முடியும். இதன் மூலம் நாட்டில் வருடத்திற்கு 6.80 லட்சம் டன் மரக் கட்டைகள் எரிவதைத் தடுக்க முடியும். 14 கோடி மரங்களைக் காக்க முடியும்.

குடல் பெருசு
பசுவின் பெருங்குடலானது 180 அடி நீளம் கொண்டது. இதன் காரணமாகத்தான் பசும்பாலில் விட்டமின் ஏ அதிக அளவு உள்ளது. வேறு எந்த பாலூட்டிகளிலும் இந்த சக்தி கிடையாது என்று போகிறது நீதிபதியின் உத்தரவு விவரம்.












Click it and Unblock the Notifications