குலாம் நபி ஆசாத்தை விட்டுவிட்டு.. காங்கிரசுக்கு ஓடிவரும் சீனியர்கள்! என்ன காரணம்?
ஶ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் புதிய கட்சியை தொடங்கி காங்கிரஸுக்கு அச்சமூட்டிய குலாம் நபி ஆசாத் கூடாரம் இப்போது ஒட்டுமொத்தமாக காலியாக கிடக்கிறது. குலாம் நபி ஆசாத்தின் கொள்கை முரண்பாடுகள்தான் ஒட்டுமொத்த தலைவர்களும் காங்கிரஸுக்கு திரும்ப காரணம் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கான தனி அரசியல் கட்சியைத் தொடங்கினார் குலாம் நபி ஆசாத். அவருடன் ஜம்மு காஷ்மீரின் பெரும்பாலான காங்கிரஸ் தலைவர்கள் இணைந்தனர். ஆனால் இப்போது குலாம் நபி ஆசாத் கட்சியில் இருந்து வெளியேறி அந்த தலைவர்கள் காங்கிரஸில் இணைந்துவிட்டனர். இதனால் குலாம் நபி ஆசாத் தொடங்கிய ஜனநாயக ஆசாத் கட்சியின் எதிர்காலம் பெரும் கேள்விக்குறியாகிவிட்டது.

இது தொடர்பாக தாய் கட்சிக்கு திரும்பிய காங்கிரஸ் தலைவர்கள் கூறுகையில், ஜம்மு காஷ்மீரின் முதன்மையான பிரச்சனை சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370வது பிரிவு ரத்து விவகாரம். இந்த விவகாரத்தில் குலாம் நபி ஆசாத் தெளிவான ஒருநிலைப்பாடு எடுக்காமல் தடுமாறி வந்தார் என்கின்றனர்.
தனிக்கட்சியை தொடங்கிய குலாம் நபி ஆசாத் தமது கொள்கையாக, ஜம்மு காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து, நில உரிமைகள், வேலைவாய்ப்பு ஆகியவற்றை முதன்மையான செயல்பாடுகள் என அறிவித்தார். ஜம்மு காஷ்மீருக்கு மீண்டும் சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் என்பதில் மக்கள் ஜனநாயக கட்சி, தேசிய மாநாட்டு கட்சி ஆகியவை உறுதியாக உள்ளன. ஆனால் குலாம் நபி ஆசாத் இதில் தெளிவான நிலைப்பாட்டை கொண்டிருக்கவில்லை என்கின்றனர்.
ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வகை செய்யும் 370-வது பிரிவை மத்திய அரசு ரத்து செய்தது. ராஜ்யசபாவின் எதிர்க்கட்சித் தலைவராக குலாம் நபி ஆசாத் பதவி வகித்த போது மத்திய அரசின் இந்த நடவடிக்கையை மிக கடுமையாக எதிர்த்து பேசினார் குலாம் நபி. ஆனால் காங்கிரஸில் இருந்து வெளியேறி தனிக்கட்சி தொடங்கிய நிலையில் குலாம் நபி ஆசாத்தின் குரலில் தடுமாற்றம் ஏற்பட்டது. அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவு மிக முக்கியமானது. அப்படி ஒன்றும் அது மோசமானது இல்லைதான். ஆனால் 70 ஆண்டுகளாக மோசமான விளைவுகள் ஏற்பட்டுவிட்டனவை என பேசியிருக்கிறார் குலாம் நபி ஆசாத்.

370-வது பிரிவு தொடர்பாக கடந்த செப்டம்பரில் குலாம் நபி ஆசாத் பேசுகையில், வாக்குகளுக்காக மக்களை நான் குழப்ப விரும்பவில்லை. அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவு மீண்டும் ஜம்மு காஷ்மீருக்கு கிடைக்க வேண்டும் எனில் லோக்சபாவில் 350 இடங்களும் ராஜ்யசபாவில் 175 இடங்களும் தேவை. பாஜக தவிர எந்த ஒரு கட்சியும் இப்போதைய நிலையில் இத்தனை இடங்களைப் பெற முடியாது. காங்கிரஸ் கட்சியின் மொத்த எம்பிக்கள் 50க்கும் கீழேதான். ஆகையால் 370-வது பிரிவை மீண்டும் கொண்டு வருவோம் என பொய்யான வாக்குறுதிகளை வழங்குகின்றனர் என பாஜக குரலில் பேசினார் என்கின்றனர்.
இது தொடர்பாக மூத்த பத்திரிகையாளர்கள் கூறுகையில், தொடக்கத்தில் குலாம் நபி ஆசாத்தும் சிறப்பு அந்தஸ்து, மாநில அந்தஸ்து என்றெல்லாம் பேசினார். ஆனால் ஒரு கட்டத்தில் இந்த நிலைப்பாடுகளில் இருந்து குலாம் நபி ஆசாத் பின்வாங்கினார். அதேநேரத்தில் 370வது பிரிவு நீக்கத்தால் ஜம்மு காஷ்மீர் மாநில மக்களின் வாழ்வில் எந்த முன்னேற்றமும் இல்லை எனவும் முரண்பாடாகவும் பேசினார் என சுட்டிக்காட்டுகின்றனர்.
பொதுவாக ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் தெளிவான நிலைப்பாடு, உறுதியான கொள்கை எதுவுமே குலாம் நபி ஆசாத்திடம் இல்லை என்பதை அவரை நம்பிப் போன ஒட்டுமொத்த காங்கிரஸ் தலைவர்களும் உணர்ந்து கொண்டனர். இதனால் ஒட்டுமொத்தமாகவே குலாம் நபி ஆசாத்துக்கு குட்பை சொல்லிவிட்டு தாய் கட்சியான காங்கிரஸுக்கே அனைவரும் திரும்பிவிட்டனர். அதுவும் ராகுல் காந்தியின் ஒற்றுமை யாத்திரை ஜம்மு காஷ்மீரை நெருங்கும் நிலையில் இந்த நிலைப்பாடு அக்கட்சியினரை உற்சாகமடைய வைத்துள்ளது. மேலும் ராகுல் காந்தியின் யாத்திரையில் ஜம்மு காஷ்மீர் முதுபெரும் தலைவர் பரூக் அப்துல்லா இணைந்து கொண்டார். இதனால் ஜம்மு காஷ்மீரில் தேசிய மாநாட்டு கட்சியும் காங்கிரஸும் கூட்டணி அமைக்கும் நிலை உள்ளது. இது சட்டசபை தேர்தலில் பெரும் வெற்றியைத் தரும் எனவும் அவர்கள் நம்புவதால் தாய் கட்சிக்கு திரும்பி இருக்கின்றனர் என்கின்றனர் சீனியர் பத்திரிகையாளர்கள்.












Click it and Unblock the Notifications