தமிழகம், மே. வங்கம், மகாராஷ்டிராவின் பாஜக மேலிட பொறுப்பாளராகிறார் அமித் ஷா?
டெல்லி: தமிழகம், மேற்கு வங்கம் மற்றும் ஒடிஷா மாநிலங்களுக்கான பாரதிய ஜனதாவின் மேலிட பொறுப்பாளராக பிரதமர் நரேந்திர மோடியின் வலது கரம் அமித் ஷா நியமிக்கப்படக் கூடும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாரதிய ஜனதா கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளராக இருப்பவர் அமித்ஷா. குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த இவர் பிரதமர் நரேந்திர மோடியின் நம்பிக்கைக்கு உரியவராகவும், நெருக்கமான விசுவாசியாகவும் உள்ளார்.
நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவித்ததும் அமித்ஷா உத்தரப்பிரதேச மாநில பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். நாட்டிலேயே மிகப்பெரிய மாநிலமான உத்தரபிரதேசத்தில் 80 தொகுதிகள் உள்ளன. இங்கு அதிக இடங்களை கைப்பற்றினால் ஆட்சியைப் பிடித்து விடலாம் என்று திட்டம் போட்டு செயலாற்றினார்.
வாரணாசியில் அமோகம்
தங்கள் மாநிலத்தில் இருந்துதான் பிரதமர் உருவாக வேண்டும் என்ற உ.பி. மக்களின் விருப்பத்துக்கு ஏற்ப மோடியை வாரணாசி தொகுதியிலும் நிற்க வைத்தார். எதிர்பார்த்தபடி உ.பி.யில் மொத்தம் உள்ள 80 தொகுதிகளில் 71 தொகுதிகளை பாரதிய ஜனதா கைப்பற்றியது.
கை கொடுத்த அமித்ஷா வியூகம்
காங்கிரசையும், முலாயம் சிங்கையும் வீழ்த்தியதுடன் மாயாவதி கட்சிக்கு ஒரு இடம் கூட கிடைக்கவில்லை. அமித்ஷாவின் தேர்தல் வியூகம் பாரதிய ஜனதாவுக்கு கை கொடுத்தது.
புது வியூகம்
இதைத் தொடர்ந்து அமித்ஷா மூலம் எதிர்காலத்தில் கட்சியை மேலும் பலப்படுத்த பாரதிய ஜனதா மேலிடம் முடிவு செய்துள்ளது. பாரதிய ஜனதா பலவீனமாக இருக்கும் மாநிலங்களில் கவனம் செலுத்த வியூகம் வகித்துள்ளது.
தமிழகம், மே.வங்கம்
தமிழ்நாடு, மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் மிக மோசமாக பலவீனமான நிலையில் பாஜக இருக்கிறது. தமிழ்நாட்டில் பா.ம.க., தே.மு.தி.க., ம.தி.மு.க. போன்ற கட்சிகளுடன் கூட்டணி சேர்ந்தும் பாரதிய ஜனதாவால் எதிர்பார்த்த வெற்றியை பெற முடியவில்லை.
மகாராஷ்டிராவில் தேர்தல்
மகாராஷ்டிரா மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதிலும் பாரதிய ஜனதா முழு கவனம் செலுத்தி வெற்றி பெற முடிவு செய்து உள்ளது.
3 மாநில பொறுப்பாளர்?
இதற்காக தமிழ்நாடு, மேற்கு வங்காளம், மகாராஷ்டிரா ஆகிய 3 மாநிலங்களுக்கும் பாரதிய ஜனதா மேலிட பொறுப்பாளராக அமித்ஷா நியமிக்கப்பட உள்ளார் என்று கூறப்படுகிறது.