துணை ஜனாதிபதி பதவிக்கு குறிவைக்கும் சரத்பவார்
டெல்லி: துணை ஜனாதிபதி பதவியை குறிவைத்து தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத்பவார் வியூகம் வகுத்து வருவதாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவராக விளங்கிய சரத் பவார் கடந்த 1999-ல் அக் கட்சியை விட்டு விலகி தேசியவாத காங்கிரஸ் கட்சியை தொடங்கினார். பின்னர் காங்கிரஸுடன் சேர்ந்து மகாராஷ்டிராவில் கூட்டணி ஆட்சி அமைத்த அவர், மத்தியில் காங்கிரஸ் அரசில் இடம்பெற்றார்.
பதவிகாலம் முடிகிறது...
தற்போது மத்தியில் ஆட்சி செய்யும் தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்களுடனும் நல்ல நட்புடன் இருந்து வருகிறார் சரத்பவார். ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி மற்றும் துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரி ஆகியோரது பதவிக் காலம் அடுத்த ஆண்டுடன் முடிவடைகிறது.
ஜனாதிபதி பதவி
ஜனாதிபதி பதவிக்கு பாஜக மூத்த தலைவர் அத்வானி, லோக்சபா சபாநாயகர் சுமித்ரா மகாஜன் உள்ளிட்ட பலரது பெயர்கள் அடிபடுகின்றன. பாஜகவின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ். இந்த விவகாரத்தில் அமைதி காத்து வருகிறது. இருப்பினும் பாஜகவை சேர்ந்த ஒருவருக்குதான் ஜனாதிபதி பதவிக்கு வாய்ப்பு இருக்கிறது.
முதல் நடவடிக்கை
அதே நேரத்தில் துணை ஜனாதிபதி பதவிக்கு சரத்பவார் தீவிரமாக முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது. இதற்கு முன்னோட்டமாக தேசியவாத காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகவும் அவருக்கு பதில் மகள் சுப்ரியா சுலேவை தலைவராக்கவும் விரும்புகிறார்.
சுப்ரியாவுக்கு எதிர்ப்பு
ஆனால் சுப்ரியாவை கட்சியின் மூத்த தலைவர்கள் பலரும் ஏற்க மறுத்து வருகின்றனர். ஆகையால் தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவராக வேறு ஒருவரை நியமிக்கவும் சரத்பவார் திட்டமிட்டு வருகிறார்.
காங்கிரஸ் ஆதரிக்கும்
இதன்பின்னர் துணை ஜனாதிபதி பதவியை பெறுவதற்கான அனைத்து லாபிகளிலும் முழு மூச்சுடன் சரத்பவார் களமிறங்குவாராம். தமக்கு துணை ஜனாதிபதி பதவி கிடைப்பதை காங்கிரஸும் எதிர்க்காது; அத்துடன் அதிமுக, ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் தமக்கு ஆதரவளிக்கும் என்பதால் மிகவும் நம்பிக்கையோடு இருக்கிறாராம் சரத்பவார்.