அலகாபாத் சென்ற சரத் யாதவ் காசியாபாத்தில் உ.பி. போலீசாரால் கைது
உத்தர பிரதேச மாநிலம் அலகாபாத்தில் இடஒதுக்கீடு குறித்த கூட்டம் ஒன்று நடக்கவிருந்தது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள ஐக்கிய ஜனதாதள தலைவர் சரத் யாதவ் துரந்தோ எக்ஸ்பிரஸ் மூலம் டெல்லியில் இருந்து அலகாபாத்துக்கு நேற்று கிளம்பினார். ரயில் காசியாபாத்தை அடைந்தபோது போலீசார் சரத் யாதவை அங்குள்ள அரசு விருந்தினர் மாளிகையில் சிறை வைத்தனர்.
அலகாபாத் கூட்டத்தில் கலந்துகொள்ள விட மாட்டோம் என்றும், மீறி வந்தால் காசியாபாத்திலேயே பிடித்து வைப்போம் என்றும் போலீசார் தன்னிடம் ஏற்கனவே தெரிவித்திருந்ததாக யாதவ் தெரிவித்தார். அகிலேஷ் யாதவின் அரசின் நடவடிக்கை தன்னை அதிசயிக்க வைப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இது குறித்து ஐக்கிய ஜனதாதள பொதுச் செயலாளர் ஜாவித் ராசா கூறுகையில்,
அலகாபாத்தில் உள்ள கே.பி. கல்லூரியில் இடஒதுக்கீடு குறித்த நிகழ்ச்சிக்கு சமாஜிக் நியாய மோர்ச்சா ஏற்பாடு செய்திருந்தது. அது இடஒதுக்கீடுக்கு ஆதரவளிக்கும் மாணவர்களின் அமைப்பு ஆகும் என்றார்.
உத்தர பிரதேச பப்ளிக் சர்வீஸ் கமிஷனில் கொண்டு வரப்பட்டுள்ள புதிய இடஒதுக்கீடு கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று முன்தினம் அலகாபாத்தில் வன்முறை வெடித்தது. அப்போது சில இளைஞர்கள் போலீசார் மீது கல்லை எறிந்தனர், வாகனங்களை அடித்து நொறுக்கினர், கடைகளை சேதப்படுத்தினர். இந்த சம்பவம் நடந்த மறுநாள் தான் யாதவ் சிறை பிடிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.