எனது மனைவி இறந்த வழக்கை சீக்கிரம் விசாரியுங்கள்- சசி தரூர் கோரிக்கை
திருவனந்தபுரம்: சுனந்தா புஷ்கர் மரணம் குறித்து விரைவாக விசாரணை நடத்தி வழக்கை முடிக்க வேண்டும் என்று அவரது கணவர் சசிதரூர் கேட்டுக்கொண்டுள்ளார்.
சுனந்தா புஷ்கர் ஜனவரி 17ம்தேதி மர்மான முறையில் மரணமடைந்தது குறித்து பல சர்ச்சைகள் தற்போது கிளம்பியுள்ளன. சுனந்தா புஷ்கரின் கணவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான சசிதரூர் மூலமாக, சுனந்தாவை பிரேத பரிசோதனை செய்த டாக்டர் மிரட்டப்பட்டதாக தகவல் வெளியாகியது. இந்நிலையில் சசிதரூர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:
சுனந்தா இறந்தது முதலே, இதுகுறித்த விசாரணையை விரைந்தும், வெளிப்படையாகவும் நடத்தி முடிக்குமாறு நான் கேட்டுக்கொண்டுள்ளேன். சுனந்தாவின் குடும்பத்தாரும் இதே நிலைப்பாட்டை கொண்டுள்ளனர். நான் மீண்டும் அதே கோரிக்கையை முன்வைக்க விரும்புகிறேன். அதன் மூலமாக அனைத்து வகையான யூகங்களுக்கும் முடிவு கட்ட வேண்டும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுல்ளது.