எனக்கு எதிராக பா.ஜ.க. நடவடிக்கைதான் எடுக்கட்டுமே.... சத்ருகன் சின்ஹா
டெல்லி: தமக்கு எதிராக முடிந்தால் பாரதிய ஜனதா கட்சி மேலிடம் நடவடிக்கை எடுத்துக் கொள்ளட்டும் ... அதைப் பற்றியெல்லாம் கவலை இல்லை என்று அக்கட்சி எம்.பி. சத்ருகன் சின்ஹா சவால்விட்டுள்ளார்.
பா.ஜ.க. எம்.பி.யாக இருந்த போதும் பிரதமர் மோடியை விமர்சித்து வருகிறார் சத்ருகன் சின்ஹா. அத்துடன் பீகார் முதல்வர் நிதிஷ்குமாரை புகழ்ந்து பேசி வருகிறார் அவர்.

நிதிஷ்குமாரை நேரில் சந்தித்து பேசிய சத்ருகன் சின்ஹா, பீகார் சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. முதல்வர் வேட்பாளரை அறிவிக்க வேண்டும் என்றும் கலகக் குரல் எழுப்பி வருகிறார்.
இதனைத் தொடர்ந்து அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க பா.ஜ.க. மேலிடம் திட்டமிட்டுள்ளது. இருப்பினும் பீகார் சட்டசபை தேர்தலுக்குப் பின்னரே சத்ருகன் சின்ஹா மீது நடவடிக்கை பாயும் என்கின்றன பா.ஜ.க. வட்டாரங்கள்.
இது தொடர்பாக தமது ட்விட்டர் பக்கத்தில், பீகார் தேர்தலுக்கு பின் என் மீது பா.ஜ.க. நடவடிக்கை எடுக்கும் என்ற உறுதி செய்யப்படாத மற்றும் அதிகாரபூர்வமற்ற அறிக்கைக்கு மக்கள் என்னிடம் இருந்து பதில் எதிர்பார்க்கின்றனர். சுயநல விருப்பங்களின் பேரில் பரப்பப்படும் அதிகாரபூர்வமற்ற அறிக்கைக்கு நான் கருத்து சொல்வதில்லை.
நியூட்டனின் 3ம் விதியை ஒருவர் மறந்து விட கூடாது. ஒவ்வொரு செயலும், சம மற்றும் எதிர் செயலை கொண்டுள்ளது எனக் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications