டோணிக்கு கிடைக்காத ஹைதராபாத் பிரியாணி.. சானியா வீட்டில் பாக். வீரர்களுக்கு சூப்பர் விருந்து!
ஹைதராபாத்: சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் டோணிக்குத்தான் வாய்க்கு ருசியாக ஹைதராபாத் பிரியாணியைச் சாப்பிட முடியாத நிலை ஏற்பட்டது. ஆனால் பாகிஸ்தானைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர்களுக்கு வாய்க்கு ருசியாக, சூப்பரான ஹைதராபாத் பிரியாணி விருந்து கிடைத்துள்ளது.. அதுவும் சானியா மிர்ஸாவின் வீட்டில் வைத்து.
சானியா மிர்ஸாவின் வீட்டில் நடந்த பிரியாணி விருந்தில், பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரும், அவரது கணவருமான சோயப் மாலிக் தலைமையில் லாகூர் லயன்ஸ் அணியின் வீரர்களுக்கு சூப்பரான விருந்து கொடுத்துள்ளனர். ஆனால் இந்த விருந்தில் சானியா மிர்ஸா மட்டும் மிஸ்ஸிங்!
கடந்த சில மாதங்களாக டென்னிஸ் போட்டிகளில் தொடர்ச்சியாக கலந்து கொண்டு ஆடி வந்தார் சானியா. சோயப்பும் பல்வேறு போட்டிகளுக்காககப் போய் விட்டார். இருவரும் சேர்ந்து இருப்பதே அரிதாகி விட்டது. இப்போதும் கூட சானியா இந்தியாவில் இல்லை. போட்டிக்காக ஜப்பானில் முகாமிட்டுள்ளார்.
சாம்பியன்ஸ் லீக் போட்டிக்காக சோயப் வருகை
தற்போது நடந்து வரும் சாம்பியன்ஸ் லீக் போட்டிக்காக இந்தியா வந்துள்ளார் சோயப் மாலிக். அவர் ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணியில் இடம் பெற்றுள்ளார். ஆனால் இந்த தொடரில் சோயப் மாலிக்கின் ஆட்டம் சரியில்லை. பேட்டிங்கிலும் சரி, பந்து வீச்சிலும் சரி அவர் ஜொலிக்கவில்லை.
மறுபக்கம் அசத்திய சானியா
கணவர் இப்படி சொதப்ப, மறுபக்கம் சானியா மிர்ஸா அசத்திக் கொண்டுள்ளார். அமெரிக்க ஓபன் கலப்பு இரட்டையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்ற அவர், அடுத்து டோக்கியோவில் நடந்த டோரே பசிபிக் ஓபன் போட்டியில், மகளிர் இரட்டையர் பிரவில் காரா பிளேக்குடன் இணைந்து பட்டம் வென்றார்.
கணவர் கொடுத்த விருந்து
இந்த நிலையில் சாம்பியன்ஸ் லீக் போட்டியில் கலந்து கொண்டுள்ள பாகிஸ்தானின் லாகூர் லயன்ஸ் அணிக்கு ஹைதராபாத்தில் உள்ள தனது மாமனார் வீட்டில் வைத்து விருந்து கொடுத்துள்ளார் சோயப் மாலிக்.
முகம்மது ஹபீஸ் தலைமையில்
முகம்மது ஹபீஸ் தலைமையிலான லாகூர் அணி வீரர்களுக்கு சானியா வீட்டில் அவரது பெற்றோர், குடும்பத்தினர் இணைந்து அருமையான விருந்து கொடுத்தனராம். பிரியாணியுடன் வேறு சில உணவு வகைகளும் கூட பரிமாறப்பட்டதாம்.
சானியாவை விட்டு விட்டு
சானியா மட்டும்தான் விருந்தில் கலந்து கொள்ள முடியாமல் போய் விட்டது. இருப்பினும் அவர் சார்பில் சோயப் மாலிக் விருந்தினர்களைச் சிறப்பாக கவனித்தாராம்.
டோணிக்குக் கிடைக்காத விருந்து
சமீபத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் டோணிக்கும், அவரது சகாக்களுக்கும் கூட இப்படிப்பட்ட ஒரு விருந்துக்கான வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அவர்கள் தங்கியிருந்த ஹோட்டலில் வெளியிலிருந்து வந்த பிரியாணியை அனுமதிக்கவில்லை. இதனால் கடுப்பாகிப் போன டோணி ஹோட்டலைக் காலி செய்து விட்டு வெளியேறி விட்டார் என்பது நினைவிருக்கலாம்.