6 மாத கர்ப்பிணியை பலாத்காரம் செய்து தலையில் கல்லை போட்டு கொன்ற கயவர்கள்! கர்நாடகாவில் சோகம்
மங்களூரு: கர்நாடக மாநிலம், குந்தாபுரா அருகே, 6 மாத கர்ப்பிணி பெண் கூட்டு பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உடுப்பி மாவட்டம் குந்தாபுரா தாலுகா பீஜாடி கிராமத்தை சேர்ந்தவர் இந்திரா மொகவீரா (30). இவருக்கு திருமணம் ஆகி இரண்டரை வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. இவரது கணவர் மல்பே மீன்பிடி துறைமுகத்தில் தங்கியிருந்து மீன்பிடி தொழில் செய்து வருகிறார். இந்திராவின் கணவர் வாரத்திற்கு ஒரு முறை தான் வீட்டிற்கு வந்து செல்வதை வழக்கமாக வைத்துள்ளார்.
இதனால் இந்திரா, தனது குழந்தை, அக்காள் கிரீஜா, அக்காள் மகள் பிரதீபா ஆகியோருடன் வசித்து வந்தார். இதற்கிடையே இந்திரா 2வது முறையாக கர்ப்பமடைந்தார். தற்போது அவர் 6 மாத கர்ப்பமாக இருந்தார்.
இந்நிலையில் சம்பவத்தன்று மாலை கிரீஜா, தனது மகன் பிரதீபாவுடன் வெளியே சென்றிருந்தார். இதனால் வீட்டில் இந்திரா, தனது குழந்தையுடன் இருந்தார். இதற்கிடையே வெளியே சென்றிருந்த கிரீஜா, மகளுடன் இரவு 8 மணி அளவில் வீட்டிற்கு திரும்பினார். அப்போது இந்திரா தலை நசுங்கிய நிலையில் சடலமாக கிடந்ததை பார்த்துள்ளார்.
அதன் அருகே இந்திராவின் குழந்தை குழந்தை தூங்கிக் கொண்டிருந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த கிரீஜா கதறி அழுதார்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் குந்தாபுரா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். அப்போது, கர்ப்பிணியான இந்திராவின் தலையில் மர்மநபர்கள் கல்லைப்போட்டு கொலை செய்து விட்டு தப்பிச் சென்றது தெரியவந்தது. மேலும் சம்பவ இடத்திற்கு மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. அது சம்பவ இடத்தில் இருந்து சிறிது தூரம் வரை ஓட்டியது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.
இதையடுத்து கொலையான இந்திராவின் உடலை போலீசார் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக குந்தாபுரா அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். அங்கு இந்திராவின் உடலை பிரேதப் பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் கற்பழித்து கொலை செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து போலீசார் கூறுகையில், கர்ப்பிணியான இந்திராவின் தலையில் மர்மநபர்கள் கல்லைப்போட்டு கொலை செய்துள்ளனர். பிரேதப் பரிசோதனையில் இந்திராவை மர்மநபர்கள் கற்பழித்து கொலை செய்திருப்பது தெரியவந்துள்ளது. மேலும் இந்திரா அரை நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார் என்றனர்.
இதனிடையே, சம்பவம் நடந்த நேரத்தில், 4 வாலிபர்கள், இந்திரா வீட்டுக்குள் இருந்து வெளியே ஓடியதை பக்கத்து வீட்டு பெண்மணி பார்த்துள்ளார். அதில் ஒருவரை அந்த பெண்மணி, போலீசாருக்கு அடையாளங்காட்டியதை தொடர்ந்து, அந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். ஆனால், இதுவரை அந்த நபரின் பெயர் விவரத்தை போலீசார் வெளியிடவில்லை.