பிரதமருக்கு ஜெயலலிதா எழுதிய கடிதம் அரசியல் உள்நோக்கம் கொண்டது: சித்தராமையா
பெங்களூர்: காவிரி பிரச்சினை குறித்து தமிழக முதல்வர் ஜெயலலிதா எழுதிய கடிதம் அரசியல் உள்நோக்கம் கொண்டது என்று கர்நாடக முதல்வர் சித்தராமைய்யா கூறியுள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா நேற்று பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதி இருந்தார். இதுபற்றி சித்தராமையாவிடம் பெங்களூரில் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அவர் கூறியதாவது:

‘‘காவிரி பிரச்சினை குறித்து தமிழக முதல்வர் ஜெயலலிதா, பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதி இருப்பது அரசியல் உள்நோக்கம் கொண்டதாகும். காவிரி விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அந்த வழக்கின் தீர்ப்பு வரும் வரை காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைப்பது சாத்தியம் ஆகாது.
பிரதமர் நரேந்திர மோடிக்கு, தமிழக முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதி இருப்பதால், கர்நாடகத்துக்கோ, மாநில மக்களுக்கோ எந்தவித பாதிப்பும் ஏற்படாது. அதுபற்றி மாநில மக்கள் கவலைப்படவும் தேவையில்லை. காவிரி பிரச்சினையை அடிக்கடி எழுப்புவதையே தமிழக அரசு வேலையாக கொண்டு உள்ளது. இதனை கர்நாடக மக்கள் கண்டுகொள்ள வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கூடாது என்று அனைத்துக்கட்சி கூட்டம் நடத்தப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடியை நான், கர்நாடக எம்.பி.க்கள், அமைச்சர்கள் சந்தித்து பேசும்போது, உச்சநீதிமன்றத்தில் வழக்கு இருப்பதை சுட்டிக்காட்டினோம்.'' இவ்வாறு முதல்வர் சித்தராமையா கூறினார்.












Click it and Unblock the Notifications