திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி திருக்கோயில் கருவறையில் சங்கு திருடியவர் கைது
கேரள மாநிலத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற திருவனந்தபுய்ரம் பத்மநாபசுவாமி திருக்கோயில் கருவறையில் இருந்த சங்கை திருடியவரை போலீஸார் கைது செய்தனர்.
திருவனந்தபுரம்: பல ஆண்டுகள் பழைமைவாய்ந்த திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி திருக்கோயில் கருவறையில் வைக்கப்பட்டிருந்த சங்கை திருடியவரை போலீஸார் கைது செய்தனர்.
திருவனந்தபுரத்தில் உள்ள பழைமையான பத்மநாப சுவாமி கோயில் உலகிலேயே பணக்கார இந்து கோயில்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இக் கோயில் விஷ்ணுவுக்கு உரிய 108 திவ்ய தேசங்கள் எனப்படும் புனித வழிபாட்டிடங்களில் ஒன்றாகக் கருதப்படுகின்றது.

இக்கோயிலில் மூலவரான பத்மனாபசுவாமி மகா விஷ்ணுவின் அவதாரமாக அனந்தசயனம் எனப்படும் யோகநித்திரையில் ஆழ்ந்திருக்கும் வண்ணம் பக்தர்களுக்கு காட்சி தருகிறார். பல கோடி மதிப்பிலான தங்க ஆபரணங்கள் இந்த கோயிலில் வைத்து பாதுகாக்கப்பட்டு வருவதால் இங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக உள்ளது.
மிகவும் பிரசித்தி பெற்ற இக்கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் கோயில் கருவறையில் வைக்கப்பட்டிருந்த ஒரு சங்கு நேற்று திருடு போனது தெரியவந்தது.
தகவலறிந்த போலீஸார் அங்கு விரைந்து கோயிலில் வைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆராய்ந்தனர். அப்போது சங்கை திருடியவரின் உருவம் பதிவானது.
அதை கொண்டு போலீஸார் தேடுதல் வேட்டையை தொடங்கினர். திருவனந்தபுரத்தில் உள்ள விடுதியில் சோதனை மேற்கொண்டதில் அங்கிருந்த ஒருவரை போலீஸார் கைது செய்தனர். விசாரணையில் அவர் சத்தீஸ்கர் மாிநலத்தைச் சேர்ந்த பரமானந்த் சோனி ( 51) என்பது தெரியவந்தது. வேறு எந்தெந்த கோயில்களிலாவது திருடியுள்ளாரா என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications