செக்ஸ் வாழ்க்கைக்கு ஆப்பு வைக்கும் சமூக வலைதள மோகம்: நிபுணர்கள் எச்சரிக்கை
மும்பை: சமூக வலைதளங்களை அதிகம் பயன்படுத்துவதால் தம்பதிகளின் செக்ஸ் வாழ்க்கை பாதிக்கப்படுகிறது என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
இந்தியாவில் உள்ள பல இளம் மற்றும் வேலைபார்க்கும் தம்பதிகள் ஸ்மார்ட்போன்கள், டேப்லெட்டுகளுடன் தான் உள்ளனர். படுக்கையறையில் கூட ஸ்மார்ட்போன்களில் ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களை பயன்படுத்துகின்றனர்.
கணவன் மனைவிக்கும், மனைவி கணவனுக்கும் வாட்ஸ்ஆப், ஹேங்க்அவுட்ஸில் முத்த ஸ்மைலியை அனுப்பவதில் காட்டும் ஆர்வத்தை நிஜத்தில் காட்டுவது இல்லை.
இளம் தம்பதிகள்
இரவு நேரத்தில் சமூக வலைதளங்களே கதி என கிடப்பதால் இளம்தம்பதிகள் அதிலும் வேலை செய்பவர்களுக்கு செக்ஸ் ஆர்வம் குறைந்து வருகிறது. இது தொடர்பாக பலர் என்னிடம் ஆலோசனை கேட்டு வருகிறார்கள் என செக்சாலஜி டாக்டர் பிரகாஷ் கோத்தாரி தெரிவித்துள்ளார்.
வேலை
அலுவலக வேலையை வீட்டுக்கு கொண்டு வருவது, ஸ்மார்ட்போனை அதிகம் பயன்படுத்துவதால் தம்பதிகளிடையே பேச்சுவார்த்தை பாதிக்கிறது. ஒருவரோடு ஒருவர் முகம் கொடுத்து பேசினால் தானே உறவுக்கு நல்லது என்கிறார் போர்டிஸ் மருத்துவமனை டாக்டர் சமிர் பாரேக்.
ஆய்வு
இங்கிலாந்தில் உள்ள ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் அண்மையில் 24 ஆயிரம் திருமணமான ஐரோப்பிய ஜோடிகளிடம் சமூக வலைதளங்களின் தாக்கம் குறித்து ஆய்வு நடத்தியது. அதில் தம்பதிகள் சமூக வலைதளங்களில் எவ்வளவுக்கு எவ்வளவு அடுத்தவர்களின் வாழ்க்கையை பார்த்து பரவசப்படுகிறார்களோ அவ்வளவுக்கு அவ்வளவு தங்கள் வாழ்வு மீது அதிருப்தி கொள்கிறார்கள் என்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது. அவர்கள் அதிருப்தி அடைவதால் அவர்களின் செக்ஸ் வாழ்க்கையும் பாதிக்கப்படுகிறதாம்.
விவாகரத்து
ஃபேஸ்புக்கே கதி என்று இருப்பதால் பல திருமணங்கள் விவாகரத்தில் முடியும் சம்பவங்களும் நடந்து வருகிறது. தம்பதிகள் சமூக வலைதளங்கள் மூலம் பிறருடன் பேசும் ஆர்வத்தை பக்கத்தில் இருக்கும் தனது துணையிடம் பேசுவதில் காட்டுவது இல்லை என்கிறார்கள் நிபுணர்கள்.