குட்பை ரேபரேலி- முதல் முறையாக ராஜ்யசபா எம்பியானார் சோனியா காந்தி! போட்டியின்றி தேர்வானதாக அறிவிப்பு!
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்.பி.யாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி தேர்வு செய்யப்பட்டதாக ராஜஸ்தான் சட்டசபை செயலகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ராஜ்யசபாவில் மொத்தம் உள்ள 250 எம்.பிக்களில் 238 பேர் மாநில சட்டசபைகளில் எம்.எல்.ஏக்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர். 12 பேர் ஜனாதிபதியால் நியமிக்கப்படுவர். இவர்கள் நியமன எம்பிக்களாக அழைக்கப்படுவர். ராஜ்யசபாவில் 245 எம்பிக்கள் உள்ளனர். இவர்களில் 233 பேர் எம்.எல்.ஏக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர். ராஜ்யசபா எம்பிக்களின் பதவி காலம் 6 ஆண்டுகள். ராஜ்யசபாவில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 109 எம்.பிக்கள் உள்ளனர். பாஜகவுக்கு மட்டும் 93 எம்.பிக்கள் இருக்கின்றனர். எதிர்க்கட்சிகள் தரப்பில் மொத்தம் 129 பேர். அதாவது காங்கிரஸ் 30, திரிணாமுல் காங்கிரஸ் 13, ஆம் ஆத்மி 10, திமுக 10, ஆர்ஜேடி 6, சிபிஎம் 5, ஜேடியூ 5, சமாஜ்வாதி 3, தேசியவாத காங்கிரஸ் 3, சிவசேனா உத்தவ் தாக்கரே 3, சிபிஐ 2, ராஷ்டிரிய லோக் தள் 1, முஸ்லிம் லீக் 1, மதிமுக 1. அதேநேரத்தில் பிஜூ ஜனதா தளம் 9, ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் 9, பிஆர்எஸ் 7, அதிமுக 4, பகுஜன் சமாஜ் 1, தெலுங்கு தேசம் 1 எம்பிக்கள் இரு பக்கமும் இல்லாமல் உள்ளனர்.

ராஜ்யசபாவில் 56 எம்பி இடங்கள் காலியாகின்றன. இதனையடுத்து ராஜ்யசபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு வேட்பு மனுத் தாக்கல் செய்யப்பட்டன. தற்போதைய ராஜ்யசபா தேர்தலில் 6 கட்சிகளை சேர்ந்த 29 பேர் போட்டியின்றி எம்.பிக்களாக தேர்ந்தெடுக்கப்படுவர் என எதிர்பார்க்கப்பட்டது. இதன்படி முடிவுகள் வெளியாகி வருகின்றன.
1999-ம் ஆண்டு முதல் 5 முறை லோக்சபா எம்பியாக இருந்தவர் சோனியா காந்தி. உத்தரப்பிரதேசத்தின் அமேதி, ரேபரேலி தொகுதிகளில் போட்டியிட்டு லோக்சபா எம்பியாக இருந்தவர் சோனியா காந்தி.
18-வது லோக்சபா தேர்தலிலும் ரேபரேலி தொகுதியில் சோனியா காந்தி போட்டியிடுவார் எனக் கூறப்பட்டது. ஆனால் திடீரென ராஜஸ்தான் மாநில ராஜ்யசபா தேர்தலில் போட்டியிடுவதற்காக சோனியா காந்தி வேட்பு மனுத் தாக்கல் செய்தார். சோனியா காந்திக்கு எதிராக யாரும் வேட்பு மனுத் தாக்கல் செய்யவில்லை. இதனையடுத்து சோனியா காந்தி ராஜ்யசபாவுக்கு போட்டியின்றி தேர்வானதாக ராஜஸ்தான் மாநில சட்டசபை செயலகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
மேலும் பாஜகவின் சன்னிலால் கிராசியா, மதன் ரத்தோர் ஆகியோரும் போட்டியின்றி ராஜஸ்தானில் இருந்து ராஜ்யசபா எம்பியாக தேர்வாகி இருப்பதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications