தேர்தல்: சோனியா தலைமையில் 50 பேர் கொண்ட பிரசார குழுவில் ப.சி, நா.சா!
டெல்லி: லோக்சபா தேர்தலுக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா தலைமையில் 50 பேர் கொண்ட பிரசார குழுவை காங்கிரஸ் அறிவித்துள்ளது.
லோக்சபா தேர்தல் அடுத்த ஓரிரு மாதங்களில் நடைபெற உள்ளது. முக்கிய எதிர்க்கட்சியான பாஜக தமது பிரதமர் பதவி வேட்பாளராக நரேந்திர மோடியை கடந்த செப்டம்பர் மாதம் அறிவித்து பிரசாரத்தை தொடங்கியுள்ளது.
காங்கிரஸ் கட்சியோ தமது பிரதமர் வேட்பாளரை அறிவிக்கவில்லை. இந்நிலையில் காங்கிரஸ் பொதுச் செயலர் ஜனார்த்தன் திரிவேதி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், சோனியா காந்தி தலைமையிலான பிரசார குழுவின் துணைத் தலைவராக ராகுல் காந்தி நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பிரதமர் மன்மோகன் சிங், மத்திய அமைச்சர்கள் ஏ.கே. அந்தோனி, ப. சிதம்பரம், நாராயணசாமி, சுஷில்குமார் ஷிண்டே, குலாம் நபி ஆசாத், சல்மான் குர்ஷீத், கமல்நாத், ஜெய்ராம் ரமேஷ் மற்றும் காங்கிரஸ் பொதுச் செயலர் திக்விஜய் சிங், டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.