சோனியா காந்தி ஆஸ்துமாவால் அவதி: தேர்தல் பிரசாரம் ரத்து
டெல்லி: காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியாகாந்தி கடுமையான ஆஸ்துமாவினால் பாதிக்கப்பட்டுள்ளதால் அவரது பிரசாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற லோக்சபாவிற்கு 9 கட்டங்களாக நடைபெறுகிறது. இதில் 5 கட்ட தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில், இன்னும் தேர்தல் நடைபெறாத தொகுதிகளில் அனல் பறக்கும் பிரசாரம் நடந்து வருகிறது.
மராட்டிய மாநிலத்தின் வடக்கு பகுதியில் உள்ள நந்தர்பர், துலே மற்றும் மும்பையில் ஞாயிறன்று காங்கிரஸ் சார்பில் பிரசார பொதுக்கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த கூட்டங்களில் கட்சித்தலைவர் சோனியா காந்தி உரையாற்றுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் சோனியாவுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், இந்த கூட்டங்களில் அவரால் கலந்து கொள்ள இயலவில்லை. எனவே நந்தர்பர், துலே ஆகிய இடங்களுக்கு சோனியாவின் பிரதிநிதிகளாக மத்திய மந்திரி குலாம் நபி ஆசாத் மற்றும் ராஜ்பப்பர் ஆகியோர் அனுப்பி வைக்கப்பட்டனர்.
எனினும் மும்பை பொதுக்கூட்டத்தில் கட்சியின் துணைத்தலைவர் ராகுல் காந்தி மற்றும், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் ஆகியோர் பங்கேற்றனர்.
மேலும் மாநில காங்கிரஸ் தலைவர் மாணிக்ராவ் தாக்கரே, முதல்வர் பிரிதிவிராஜ் சவான் ஆகியோரும் இந்த கூட்டங்களில் கலந்து கொண்டனர்.
இதனிடையே சோனியா காந்தி கடுமையான ஆஸ்துமா நோயினால் சிரமப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது சோனியா சிகிச்சை பெற்று வருகிறார். இன்னும் ஓரிரு நாட்களில் அவர் முழுமையாக குணமாகி விடுவார் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
அதுவரை அவர் எந்த ஒரு பொதுக்கூட்டத்திலும் கலந்து கொள்ள மாட்டார். இதனால் சோனியா பொதுக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்தவர்கள் தவித்தப்படி உள்ளனர்.