தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்குகிறது- பால் வார்த்த வானிலை மையம்
தென்மேற்கு பருவமழை நடப்பாண்டு முன்கூட்டியே தொடங்குகிறது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
டெல்லி: இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை இரண்டு நாட்கள் முன்னதாகவே மே 28ஆம் தேதி கேரளாவில் துவங்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
ஆண்டுதோறும் ஜூன் முதல் செப்டம்பர் முடிய தென்மேற்கு பருவமழை காலமாகும். கடந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை தாமதமாக தொடங்கியது. எதிர்பார்த்த அளவு மழை பெய்யாமல் ஏமாற்றி விட்டது.
வடகிழக்கு பருவமழையும் பொய்த்துப் போனதால் வறட்சி தாண்டமாடுகிறது. நீர் நிலைகள் வறண்டு விட்டன. பல மாவட்டங்களில் குடிநீர் பிரச்சினை தலைதூக்கியுள்ளது.

கோடை மழை
வறட்சி, வெப்பத்தின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், பல மாவட்டங்களில் கோடை மழை பெய்து மக்களின் மனங்களை குளிர்ச்சியடையச் செய்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்து வரும் மழையால் அணைகளில் நீர் மட்டம் உயர்ந்து வருகிறது.

தென்மேற்கு பருவமழை
ஆண்டு தோறும் அந்தமான் நிக்கோபார் தீவுகளில் மே மாதம் 17ஆம் தேதி தொடங்கும் . ஆனால் இந்த ஆண்டு அது 3 நாட்களுக்கு முன்னதாகவே துவங்க வாய்ப்புள்ளது. இதற்கு ஏற்ப கால நிலையும் மேகக்கூட்டங்களும் அந்தமானை சுற்றி உருவாகி உள்ளன. இதனால் 14ஆம் தேதியே பருவமழை துவங்க வாய்ப்புள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

மே 28ல் பருவமழை தொடக்கம்
அந்தமானில் மழை பெய்ய துவங்கி 2 வாரங்களுக்குள் கேரளா பருவ மழையை சந்திக்கும். எனவே இந்த மாதம் 28 அல்லது 29 தேதி கேரளாவில் தென்மேற்கு பருவமழை பொழியத் துவங்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

கேரளாவில் மழை
கேரளாவில் ஆண்டு தோறும் ஜூன் 1ஆம் தேதி பருவமழை துவங்கும். சில தடவை வலுவான காற்று காரணமாக 5 நாள்கள் வரை பருவமழை தள்ளிப்போனதும் நடந்துள்ளது. கடந்த ஆண்டு ஒருவாரம் தள்ளி பருவமழை தொடங்கியது.

எல்நினோ ஆபத்து நீங்கியது
பருவமழையை வெகுவாக பாதித்த எல் நினோ ஆபத்து இல்லை என்றும் எனவே பருவமழை பொய்த்துவிடும் என அச்சப்படத் தேவையில்லை எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை நடப்பாண்டு ஏமாற்றாது என்ற இந்திய வானிலை மையத்தின் அறிவிப்பு தமிழக மக்கள், விவசாயிகள் வயிற்றில் பால் வார்க்கும் அமைந்துள்ளது.












Click it and Unblock the Notifications