ஓபிஎஸ் அணி எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்யுங்கள்.... கர்நாடகா மாநில அதிமுக செயலாளர் புகழேந்தி
ஓபிஎஸ் அணி எம்எல்ஏ-க்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று கர்நாடகா மாநில அதிமுக செயலாளர் புகழேந்தி கோரிக்கை விடுத்துள்ளார்.
பெங்களூர்: நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசுக்கு எதிராக வாக்களித்த ஓபிஎஸ் அணி எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று கர்நாடகா மாநில செயலாளர் புகழேந்தி தெரிவித்தார்.
அதிமுக இணைப்புக்கு பிறகு பிரச்சினைகள் சுமூகமாகும் என்று எதிர்பார்த்த வேளையில் தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் தற்போது பிரச்சினையில் ஈடுபட்டு வருகின்றனர்.
தினகரன், சசிகலாவை நீக்கி விட்டு அரசியல் செய்யக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து தினகரன் ஆதரவு எம்எல்ஏ-க்கள் 19 பேர் ஆளுநரை சந்தித்து முதல்வருக்கு எதிராக மனு அளித்தனர்.
இந்நிலையில் கட்சித் தலைமைக்கு எதிராக தலைமைக் கொறடாவின் அனுமதியின்றி 19 பேரும் செயல்பட்டதாகவும் அவர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் சபாநாயகர் தனபாலிடம் கடிதம் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் 19 பேரும் விளக்கம் அளிக்க வேண்டும் என்று சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
இதுகுறித்து கர்நாடக மாநில செயலாளர் புகழேந்தி கூறுகையில், ஓபிஎஸ் அணியினரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும். நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசுக்கு எதிராக ஓபிஎஸ் அணியினர் வாக்களித்தனர். அவர் அணி எம்.எல்.ஏ-க்களை தகுதி நீக்கம் செய்யாததால் நீதிமன்றத்தை நாடுவதாக புகழேந்தி தெரிவித்தார்.