கேரளா எம்.பி இ.அகமது மறைவுக்கு லோக்சபாவில் இரங்கல் - உறுப்பினர்கள் மவுன அஞ்சலி
மறைந்த எம்.பி இ.அகமது மறைவிற்கு லோக்சபாவில் இரங்கல் தெரிவிக்கப்பட்டு ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. அவையை ஒத்திவைக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் விடுத்த கோரிக்கையை சபாநாயகர் நிராகரித்தார்.
டெல்லி: மாரடைப்பினால் மரணமடைந்த கேரளா மாநில எம்.பி இ. அகமது மறைவுக்கு லோக்சபாவில் சபாநாயகர் சுமித்ரா மகாஜன் இரங்கல் குறிப்பு வாசித்தார். இதனைத் தொடர்ந்து உறுப்பினர்கள் ஒரு நிமிடம் எழுந்து நின்று அஞ்சலி செலுத்தினர்.
இதனையடுத்து பட்ஜெட் தாக்கல் செய்ய நிதியமைச்சர் அருண் ஜெட்லிக்கு சுமித்ரா மகாஜன் அழைப்பு விடுத்தார். பட்ஜெட் தாக்கல் செய்ய எதிர்ப்பு தெரிவித்து அவையில் கூச்சல் குழப்பம் நிலவியது.
இதனையடுத்து காங்கிரஸ் எம்.பி மல்லிகார்ஜூன கார்கே எழுந்து எதிர்ப்பு தெரிவித்தார். சபாநாயகருடன் கார்கே வாக்குவாதம் செய்தார். அகமது மூத்த நாடாளுமன்றவாதி. பணியில் இருந்தபோதே அகமது மரணமடைந்தார் எனவே அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக அவை ஒத்திவைக்க வேண்டும் என்ற கோரிக்கை விடுத்தார் கார்க்கே
கார்கேவின் கோரிக்கையை சபாநாயகர் நிராகரித்தார். பட்ஜெட் இருப்பதால் அவையை ஒத்திவைக்கவில்லை என்று கூறிய சுமித்ரா மகாஜன் அகமதுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் நாளை நாடாளுமன்ற அலுவல் கிடையாது என்று கூறினார்.
பலத்த கூச்சல் குழப்பத்திற்கு இடையே பட்ஜெட்டை திட்டமிட்டபடி தாக்கல் செய்தார் அருண் ஜெட்லி.