லோக்சபா தேர்தல் 2-ஆவது சுதந்திர போராட்டம்.. கொல்கத்தாவில் ஸ்டாலின் அனல் பேச்சு
Recommended Video
கொல்கத்தா: வரும் மே மாதம் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தல் இந்தியாவின் 2-ஆவது சுதந்திர போராட்டம் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கொல்கத்தாவில் உரையாற்றினார்.
மேற்குவங்க தலைநகர் கொல்கத்தாவில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், அம்மாநில முதல்வருமான மம்தா பானர்ஜி தலைமையில் இன்று எதிர்க்கட்சித் தலைவர்கள் பங்கேற்கும் மாநாடு நடைபெற்று வருகிறது.
இதில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் வங்கமொழியில் வணக்கம் கூறி உரையை தொடங்கினார் ஸ்டாலின். அவர் மேலும் பேசுகையில் வங்கத்து விவேகானந்தருக்கு கன்னியாகுமரியில் சிலை வைத்துள்ளோம். தமிழுக்கு மிக நெருக்கமான மொழி வங்கமொழியாகும்.
இரும்பு பெண்மணி
மேற்கு வங்கத்துக்கும் தமிழகத்துக்கு மிக நெருங்கிய தொடர்பு உண்டு. சுதந்திர போராட்டத்தை முன்னெடுத்த இனங்களில் தமிழர்களும் வங்காளிகளும் முக்கியமானவர்களாவர். வங்கத்து இரும்பு பெண்மணி மம்தாவின் அழைப்பை ஏற்று வந்துள்ளேன்.
விருப்பம்
மே மாதம் நடைபெறவுள்ள தேர்தல் இந்தியாவின் இரண்டாவது சுதந்திர போராட்டம் ஆகும். இங்கிருக்கும் மேடையில் நான் இந்தியாவை பார்க்கிறேன். பாஜவை வீழ்த்த வேண்டும். நரேந்திர மோடியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம் ஆகும்.
தோற்றுவிடுவோம்
நாம் வேறு வேறாக இருந்தாலும் நமது லட்சியம் ஒன்றுதான். எதிரிகளே இல்லை என்று கூறிய மோடி இன்று எதிர்க்கட்சிகளை விமர்சிக்கிறார். எதிர்க்கட்சிகள் ஒன்றிணைவது கண்டு மோடிக்கு பயமாக உள்ளது. தோற்றுவிடுவோம் என்ற பயத்தில் மோடி நம்மை திட்டுகிறார்.
பொய் கூறிய மோடி
நம் ஒற்றுமை மோடியை பயம் கொள்ள வைத்துள்ளது. ஒற்றுமை இருந்தால் வெற்றி நமக்குதான் மோடிக்கு தோல்விதான். பொய்யான வாக்குறுதிகளை அளித்து ஆட்சிக்கு வந்தவர் மோடி. வெளிநாட்டில் உள்ள கருப்பு பணத்தை மீட்டு இந்திய மக்களுக்கு தலா ரூ 15 லட்சம் தருவதாக பொய் கூறினார் மோடி.
பயப்படுவார் மோடி
மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் 50 ஆண்டுகளுக்கு நாடு பின்னோக்கி சென்று விடும். மோடி ஒரு சிலரை பார்த்து பயப்படுவார், அதில் மமதா பானர்ஜி ஒருவர். மேற்கு வங்கத்திற்குள் வருவதற்கே மோடி, அமித்ஷா பயப்படுகிறார்கள். கருணாநிதி மீது பெரிய மரியாதை கொண்டவர் மமதா பானர்ஜி. கருணாநிதி மறைந்ததும் சென்னைக்கு உடனடியாக வந்து மரியாதை செலுத்தினார்.
காப்பாற்றும்
அப்படிப்பட்ட மமதா பானர்ஜி அழைப்பை நான் எப்போதும் ஏற்பேன். அடுத்த 5 மாதகாலமாக எதிர்க்கட்சிகள் இணைந்து பாஜகவை வீழ்த்த வேண்டும். தனியாக இருந்து பாஜகவை வீழ்த்த முடியாது, இதை அனைத்து கட்சிகளும் உணர வேண்டும். நமது ஒற்றுமை, இந்தியாவை காப்பாற்றும் என்றார்.
அனல் பறந்த பேச்சு
நன்றி, வணக்கம் என்று வங்கமொழியில் தெரிவித்து உரையை நிறைவு செய்தார் ஸ்டாலின். இவரது பேச்சு அனல் பறக்கும் விதத்தில் இருந்தது.