வங்கதேசத்தவர் மாட்டுக்கறி சாப்பிடுவதை கைவிட பி.எஸ்.எப். படையினருக்கு ராஜ்நாத்சிங் பிறப்பித்த 'கட்டளை
டெல்லி: எல்லையில் மாடுகள் கடத்தலை முற்றிலுமாகத் தடுத்தால் வங்கதேச நாட்டவர் மாட்டுக்கறியை சாப்பிடுவதையே நிறுத்த வேண்டிய நிலைமை வரும் என்று எல்லைப் பாதுகாப்பு படையினருக்கு உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மேற்கு வங்க மாநிலம்- வங்கதேசம் எல்லையில் உள்ள எல்லைப் பாதுகாப்பு படையினர் (பி.எஸ்.) முகாம்களை கடந்த புதன்கிழமையன்று ராஜ்நாத்சிங் ஆய்வு செய்தார். ஆனால் மாநில அரசிடம் கலந்தாலோசிக்காமலேயே ராஜ்நாத் பயணம் மேற்கொண்டிருந்ததாக மேற்கு வங்க முதல்வர் மமதா சீறியிருந்தார்.
இதனிடையே எல்லைப் பாதுகாப்புப் படையினரிடம் ராஜ்நாத்சிங் பேசியிருந்ததாவது:
எல்லையில் மாடுகள் கடத்தலைத் தடுப்பதில் பாதுகாப்புப் படையினர் விழிப்புணர்வுடன் செயல்பட்டதால் வங்கதேசத்தில் மாட்டுக் கறி விலை 30% உயர்ந்துள்ளது. இன்னும் முழுமையாக கண்காணிப்பை மேற்கொண்டால் 70%-80% விலை உயர்ந்துவிடும்.
வங்கதேச நாட்டவர் மாட்டுக்கறி உண்பதையே கைவிடும் நிலைமையும் உருவாகும் என்று கூறியுள்ளார்.
நமது நாட்டில் பொதுவாக மாடுகளின் வாழ்நாள் காலம் 15 முதல் 20 ஆண்டுகள். பொதுவாக மாடுகள் தங்கள் வாழ்நாள் காலம் முடிவதற்கு 5 ஆண்டுகளுக்கு முன்பு பால் கொடுப்பதை நிறுத்தி விடும்.
ஒரு ஆண்டுக்கு சுமார் 25 லட்சம் அடிமாடுகள் வங்கதேசத்துக்கு கடத்தப்படுகிறது. இவற்றை முற்றிலுமாக நிறுத்தினால் அந்த அடிமாடுகளுக்கான செலவுக்கு ரூ1.25 கோடி. இதில் அரசாங்கத்தின் பங்களிப்பாக ரூ31.250 கோடியாக இருக்கும் என்கின்றனர் தொழில்துறையினர்.
அதாவது ரூ31 ஆயிரம் கோடியை இந்தியா செலவு செய்தாவது வங்கதேசத்தவர் மாட்டுக் கறி சாப்பிடுவதை நிறுத்த வேண்டும் என்கிறாரோ ராஜ்நாத் என்றும் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.