தீர்ப்புக்கு எதிர்ப்பு- கேரளாவில் நாளை முழு அடைப்புக்கு அழைப்பு!
திருவனந்தபுரம்: முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளாவில் நாளை முழு அடைப்புப் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
முல்லைப் பெரியாறு அணையில் 142 அடிக்கு நீரை தேக்கி வைக்க வேண்டும் என்பது தமிழகத்தின் கோரிக்கை. இதை ஏற்று 2006ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் அணையில் 142 அடி நீரை தேக்கி வைக்க உத்தரவிட்டது.
இதற்கு எதிராக கேரளா அணை பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்றியது. இந்த நடவடிக்கைக்கு எதிராக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி லோதா தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன பெஞ்ச், தமிழகத்தின் கோரிக்கையை ஏற்று 142 அடிக்கு நீரை தேக்கி வைக்க உத்தரவிட்டுள்ளது.
உச்சநீதிமன்றத்தின் இந்த வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்புக்கு தமிழக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில் கேரள தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக கேரளாவில் நாளை முழு அடைப்புப் போராட்டம் நடத்த முல்லைப் பெரியாறு நடவடிக்கைக் குழு அழைப்பு விடுத்துள்ளது.